பாஜகவில் போஸ்டர் ஒட்டுபவர்கூட தலைவராகலாம் -அமைச்சர் நிதின் கட்கரி
“பாஜக வாரிசு கட்சியல்ல, உழைப்பாளர்களின் கட்சி...”
பாஜகவில் போஸ்டர் ஒட்டுபவர்கூட தலைவராகலாம் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேசியுள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் சனிக்கிழமை(ஆக. 3) நடைபெற்ற பாஜக மாநாட்டில் கலந்துகொண்ட மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேசியதாவது, பாஜக வாரிசு கட்சியல்ல, உழைப்பாளர்களின் கட்சி. பிரசாரத்துக்காக பாஜகவில் போஸ்டர் ஒட்டியவர்கூட கட்சியின் தேசியத் தலைவரானார். இதுபோன்றதொரு தருணம் சாதாரண தொண்டருக்கு பாஜகவில் மட்டுமே அமையும்.
கட்சித் தொண்டர்கள் வாக்குச்சாவடி பூத் அளவிலும், நமக்கு(பாஜகவுக்கு) வாக்கு செலுத்தியவர், செலுத்தாதவர் என்ற பேதமின்றி சாமானிய மக்களுடன் எளிதாகப் பழகுவதிலும் கவனத்தை செலுத்த வேண்டும் என்றார்.
தனது ஆரம்பகால அரசியல் வாழ்வில் பாஜக தொண்டராகப் போஸ்டர் ஒட்டும் வேலை செய்துள்ள நிதின் கட்கரி பின்னாளில் அக்கட்சியின் தேசியத் தலைவராக உயர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.