முகப்பு
இந்தியா

கனமழையால் கங்கை நதி நீர்மட்டம் உயர்வு!

தொடர் கனமழையால் கங்கை நதியின் நீர்மட்டம் உயர்ந்து வருவதாக மத்திய நீர் ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

Updated On : 7 ஆகஸ்ட், 2024 at 6:37 AM
கங்கை நதி (கோப்புப் படம்)
பகிர்:

மலையோரப் பகுதிகளில் தொடர்ச்சியாகப் பெய்து வரும் கனமழை மற்றும் பல அணைகளில் நீர் திறந்துவிடப்பட்ட காரணத்தால் கங்கை நதியின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

கங்கை நதியின் நீர்மட்டம் ஒரு மணி நேரத்திற்கு 4 செ.மீ. அளவு உயர்ந்து வருவதாகவும் வரும் நாள்களில் இது அதிகரிக்கக் கூடும் என்றும் மத்திய நீர் ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

நீர் உயர்வால் கங்கை நதிக்கரையோரப் பகுதிகளுக்கு இடையேயான இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. கங்கை நதிக்கரையில் உள்ள கோவில்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. வாரணாசியில் கங்கை ஆரத்தி நடைபெறும் இடம் மாற்றப்பட்டு கட்டட மேற்பகுதியில் நடத்தப்படுகிறது.

தண்ணீரின் வேகம் அதிகமாக இருப்பதால் சிறிய படகுகள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

நதிக்கரையோரம் வசிக்கும் மஜ்ஜி இனத்தைச் சேர்ந்த மக்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

கங்கை மற்றும் யமுனை நதியின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் உத்திரப் பிரதேசத்தின் பிரயக்ராஜ் பகுதியைச் சுற்றியுள்ள இடங்கள் நீரில் மூழ்கியுள்ளன.

பாட்னாவில் கங்கை நதியை ஒட்டியுள்ள பகுதிகளில் சட்டவிரோதமாக கட்டுமானங்கள் மற்றும் ஆக்கிரமிப்பு தொடர்பான வழக்கில் நீதிபதிகள் ரிஷிகேஷ் ராய் மற்றும் எஸ்விஎன் பாட்டி ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்றைய (ஆகஸ்ட் 6) வழக்கு விவாதத்தின் போது, “பிளாஸ்டிக் பொருள்கள் பயன்பாடு பரவலாக உள்ள நதிக் கரைப் பகுதிகளில் சுற்றுச்சூழல் மாசுபாடு ஏற்படுத்தும் பொருள்கள் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும்.

நாட்டின் நீர்நிலைகள் சீரழிந்து வருவது மிகவும் கவலைக்குரிய விஷயமாகும். நதிகளில் பிளாஸ்டிக் கழிவுகளைக் கொட்டுவது சுற்றுச்சூழல் சீரழிவை ஏற்படுத்துவதுடன், நதிக்கரைகளிலும் நீர்நிலைகளிலும் வாழும் நீர்வாழ் உயிரினங்களை வெகுவாகப் பாதிக்கிறது” என்று தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.