ஜம்மு-காஷ்மீர்: பயங்கரவாதத் தாக்குதலில் ராணுவ அதிகாரி பலி!
அமெரிக்க துப்பாக்கி, ரத்தத்தால் நனைந்த பைகள் கைப்பற்றப்பட்டது
வனப்பகுதியில் மறைந்திருந்த பயங்கரவாதிகளைப் பிடிக்க முயன்றபோது ராணுவ அதிகாரி பலியானார்.
ஜம்மு காஷ்மீரின் தோடா மாவட்டத்தின் அசார் வனப்பகுதியில் மறைந்திருந்த பயங்கரவாதிகளைப் பிடிப்பதற்காக ராணுவப் படையின் ஒரு குழுவினர் சென்றிருந்தனர்.
இந்த நிலையில், ஆக. 13, செவ்வாய்க்கிழமை, இரவுநேரத்தில் ராணுவ வீரர்களுக்கும், 4 பேர் கொண்ட பயங்கரவாதக் குழுவினருக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடந்தது. பின்னர், இன்று காலை மீண்டும் இரு தரப்பினருக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடந்தது.
Advertisement
இந்தத் தாக்குதலின்போது, இராணுவ அதிகாரி கேப்டன் தீபக் சிங் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டார். மேலும், அப்பகுதியைச் சேர்ந்த ஒருவரும் காயமடைந்தார்.
தாக்குதல் நடந்த இடத்திலிருந்து அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட எம்4 ரகத் துப்பாக்கி, ரத்தத்தில் நனைந்த மூன்று பைகள், பிற உபகரணங்களையும் பாதுகாப்புப் படையினர் கைப்பற்றியுள்ளனர்.
நாளை (ஆக. 15) சுதந்திர தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில், ராணுவ வீரரின் உயிரிழப்பு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதாக சமூக ஊடகங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.