முகப்பு
இந்தியா

பாஜக என்னை கைது செய்ய நினைக்கிறது: கேஜரிவால்

பாஜக தன்னை கைது செய்ய நினைப்பதாக தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார்.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 3:25 PM
பகிர்:

தில்லி: பாஜக தன்னை கைது செய்ய நினைப்பதாக தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார்.

தில்லி கலால் கொள்கையை வகுத்து நடைமுறைப்படுத்தியதில் ஊழல் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதன் காரணமாக தில்லி முன்னாள் துணை முதல்வரும் கலால் துறை அமைச்சருமான மனீஷ் சிசோடியா, ஆம் ஆத்மி மாநிலங்களவை உறுப்பினா் சஞ்சய் சிங் உள்ளிட்டோா் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.

இந்தக் கலால் கொள்கை முறைகேட்டில் தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கும் தொடா்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆகையால், விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு அவருக்கு இதுவரை மூன்று முறை சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

அந்த சம்மனை நிராகரித்த கேஜரிவால், அரசியல் உள்நோக்கத்துடன் தனக்கு சம்மன் அனுப்பப்பட்டதாக குற்றம்சாட்டி நேரில் ஆஜராகவில்லை.

இதற்கிடையே, அரவிந்த் கேஜரிவால் வீட்டில் இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், அதன்பிறகு அவரை கைது செய்ய வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகின.

இந்த நிலையில், அமலாக்கத்துறை சம்மன் குறித்து கேஜரிவால் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்துள்ளார்.

அப்போது, “தேர்தலுக்கு முன்பாக சட்டவிரோதமாக எனக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மனீஷ் சிசோடியா, சஞ்சய் சிங் மற்றும் விஜய் நாயர் பாஜகவின் அழைப்பை ஏற்க மறுத்துவிட்டனர்.

எதிர்க்கட்சியினர் மீது அமலாக்கத்துறை, சிபிஐயின் பல வழக்குகள் உள்ளன. பாஜகவில் இணைந்தால் அவர்களின் வழக்குகள் முடிந்துவிடும். பாஜகவில் சேரவில்லை என்றால் சிறைக்கு அனுப்பப்படுவர்.

ஊழல் செய்யப்படவில்லை என்பது தான் உண்மை. பாஜகவுக்கு என்னை கைது செய்ய வேண்டும். எனது மிகப்பெரிய சொத்தே எனது நேர்மை தான். அதனைக் குறைக்க பாஜக விரும்புகிறது. அமலாக்கத்துறை எனக்கு அனுப்பிய சம்மன் சட்டவிரோதமாக இருப்பதாக எனது வழக்கறிஞர்கள் கூறினார்கள். 

பாஜகவின் குறிக்கோள் என்னை விசாரிக்க வேண்டும் என்பது அல்ல. மக்களவைத் தேர்தலில் நான் பிரசாரம் செய்யக் கூடாது என்பதுதான். விசாரணை என்ற பெயரில் அழைத்து என்னை கைது செய்ய திட்டமிட்டுள்ளனர்.

நடப்பது அனைத்தும் ஜனநாயக நாடான இந்தியாவுக்கு ஆபத்தானதாகவும், தீங்கானதாகவும் உள்ளது. இந்தியாவுக்காக என் இதயம் துடிக்கிறது. பாஜகவை எதிர்த்து போராட உங்களின் ஆதரவு தேவை.” என்று தெரிவித்தார்.

அரவிந்த கேஜரிவாலின் வீடு அமைந்துள்ள சாலை காவல்துறையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →