அதிகரிக்கும் சாலை விபத்துகள்: பலி எண்ணிக்கை இவ்வளவா?
சாலை பாதுகாப்பு குறித்து மத்திய அமைச்சர் பேசியுள்ளார்.
புது தில்லி: சாலை பாதுகாப்பே ஒரு அரசின் முதன்மையான கடமை எனவும் 2030 ஆம் ஆண்டுக்குள் சாலையில் நடைபெறும் விபத்துகளை 50 சதவிகிதம் அளவுக்கு குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
தொழில் அமைப்பான சிஐஐ ஒருங்கிணைத்த நிகழ்வில் பேசிய கட்கரி, பொறியியல் (சாலை மற்றும் வாகன தொழில்நுட்பம்), அமலாக்கம், கல்வி மற்றும் அவசர மருத்துவ சேவைகள் ஆகியவற்றை வலுப்படுத்துவதன் மூலம் சமூக நடத்தையில் மாற்றம் ஏற்படுத்துவது முக்கியத்துவம் வாய்ந்தது என குறிப்பிட்டார்.
சாலை பாதுகாப்பில் கவனம் செலுத்துமாறு அவர் தொழில் நிறுவன அமைப்புகளிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
அவர் வெளியிட்ட தகவல்களின் அடிப்படையில் 2022-ல் 4.6 லட்சம் சாலை விபத்துகள் நிகழ்ந்ததாகவும் 1.68 லட்சம் பேர் உயிரிழந்ததாகவும் 4 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்குப் பலத்த காயம் ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
உள்நாட்டு உற்பத்தியில் இதன் பாதிப்பு 14 சதவிகிதம் அளவுக்கு இருந்துள்ளது.
மேலும், 60 சதவிகிதம் விபத்துக்குள்ளாகுபவர்கள் 18 முதல் 35 வயதுக்குட்பட்டவர்கள் எனத் தெரிவித்தார்.