மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது ஈரான் தாக்குதல்!
பஹ்ரைன், குவைத், கத்தார் மற்றும் அபுதாபியில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது ஈரான் தாக்குதல்...
பஹ்ரைன், குவைத், கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளிலுள்ள அமெரிக்க ராணுவத் தளங்களின் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானின் தலைநகர் தெஹ்ரானின் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து சனிக்கிழமை (பிப். 28) காலை வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளன. இந்தத் தாக்குதல்களால், ஐக்கிய அரபு அமீரகம், இராக் உள்ளிட்ட நாடுகள் தங்களது வான்வழிப் பாதைகளை மூடியுள்ளன.
இந்த நிலையில், மத்திய கிழக்கில் அமைந்துள்ள பஹ்ரைன், குவைத், கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி உள்ளிட்ட நாடுகளிலுள்ள அமெரிக்க தளங்களைக் குறிவைத்து ஈரான் பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, அபுதாபி மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளில் பயங்கர வெடிப்புகளின் சத்தம் எழுந்ததாக உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர். அங்குள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் தாக்கப்பட்டது உறுதியாகியுள்ளது.
மத்திய கிழக்கில் அமெரிக்காவின் மிகப் பெரிய ராணுவத் தளம் அமைந்துள்ள கத்தாரின் அல்-உதெய்த் தளத்தைக் குறிவைத்து ஏவப்பட்ட ஏவுகணைகளை அந்நாட்டின் வான் பாதுகாப்பு அமைப்பு தகர்த்துள்ளதாகக் கூறப்படுகிறது.
ஏற்கெனவே, கடந்த 2025 ஆம் ஆண்டு இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையில் நடைபெற்ற போரில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். இதையடுத்து, தற்போது நடைபெறும் மோதல்களால், மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றமான சூழல் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.