காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் காங்கிரஸ் நடைப்பயணத்தில் அஸ்ஸாமில் ஏற்படும் பாதுகாப்பு பிரச்னைகள் பற்றி அவர் பேசியுள்ளார்.
அந்தக் கடிதத்தில் அவர் கூறியுள்ளதாவது, 'நடைப்பயணத்தின் முதல் நாளில் அஸ்ஸாமிற்குள் நுழைந்தபோது காவல்துறையினர் பங்கேற்பாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யாமல், பாஜகவின் சுரொட்டிகளைப் பாதுகாத்தனர்'
'இரண்டாம் நாளில் லக்கிம்பூர் மாவட்டத்தில் காங்கிரஸ் நடைபயணத்தின் சுவடொட்டிகள் பாஜகவினரால் சேதப்படுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. காங்கிரஸின் சமூக வலைதளப் பிரிவைச் சார்ந்தவர்களும், காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேசும் தாக்கப்பட்டனர். ஜெய்ராம் ரமேசின் கார் பாஜகவினரால் சேதப்படுத்தப்பட்டுள்ளது.' எனக் குற்றம் சாட்டினார்.
'அந்தப் பகுதி காவல் கண்காணிப்பாளர் அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மாவின் சகோரர். அவர் இந்த தாக்குதல்களை பார்த்துக்கொண்டுதான் இருந்தார்.'
'சோனித்பூர் மாவட்ட பாஜகவினர் ராகுல்காந்தியின் நடைபயணத்தை தடுத்ததோடு அஸ்ஸாம் பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் பூபென் போராவை ரத்தம் கொட்டுமளவில் தாக்கியுள்ளனர்' என கார்கே கடிதத்தில் குற்றம் சாட்டியுள்ளார்.
'இதுபோன்ற பல பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கும் பிரச்னைகள் அனைத்திலும் அஸ்ஸாம் காவல்துறையினர் வேடிக்கை மட்டுமே பார்த்துள்ளனர். பாஜகவினரை அவர்கள் தடுக்கவில்லை' எனவும் குற்றம் சாட்டினார்.
இந்த வன்முறைச் சம்பங்களை நிரூபிக்கும் காணொலி ஆதாரங்கள் சமூக வலைதளங்களில் இருந்தும், தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படவில்லை. எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த பிரச்னையில் தலையிட்டு, அஸ்ஸாம் முதல்வர் மற்றும் காவல்துறை தலைமை இயக்குநர் ஆகியோர் காங்கிரஸ் நடைபயணத்திற்கு பாதுகாப்பு அளிப்பதை உறுதி செய்ய கார்கே கடிதத்தில் அமித்ஷாவைக் கேட்டுக்கொண்டுள்ளார்.