பாஜக-வினால் என்னை பயமுறுத்த முடியாது!: ராகுல் காந்தி
ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவால் என்னை பயமுறுத்த முடியாது என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கூறியுள்ளார்.
இந்திய ஒற்றுமை நியாய நடைபயணத்தின் 7 ஆவது நாளில் பர்பேட்டா மாவட்டத்தில் மக்களிடம் பேசிய ராகுல் காந்தி, அஸ்ஸாம் முதல்வராலோ, பாஜகவாலோ என்னை பயமுறுத்த முடியாது எனக் கூறியுள்ளார்.
'வழக்குகள் மூலம் என்னை பயமுறுத்திவிடலாம் என அஸ்ஸாம் முதல்வர் எப்படி நினைத்தார் என எனக்குப் புரியவில்லை. இன்னும் 25 வழக்குகள் கூட போட்டுக்கொள்ளுங்கள். நான் பயப்படமாட்டேன்.' என அவர் கூறினார்.
மேலும், 'பாஜகவினாலோ, ஆர்எஸ்எஸ்-ஆலோ என்னை பயமுறுத்த முடியாது' எனத் தெரிவித்துள்ளார். 'பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அஸ்ஸாமின் மொழி, கலாச்சாரம், வரலாறு ஆகியவற்றை அழிக்க முயற்சிக்கிறது' எனக் குற்றம் சாட்டினார்.
Advertisement
இதையும் படிக்க: 78 தரமற்ற மருந்துகள் கண்டுபிடிப்பு
'அஸ்ஸாமை நாக்பூரிலிருந்து ஆட்சி செய்ய நினைக்கிறார்கள். அஸ்ஸாமை அஸ்ஸாமிலிருந்து மட்டும்தான் ஆட்சி செய்ய வேண்டும். அதிக ஊழல் செய்யும் முதல்வர் அஸ்ஸாம் முதல்வர் சர்மாதான்' எனவும் குற்றம் சாட்டினார்.
கடந்த செவ்வாய் கிழமை, அஸ்ஸாம் கல்லூரியில் ராகுல் காந்திக்கு அளிக்கப்பட்ட அனுமதி திடீரென மறுக்கப்பட்டதால், காங்கிரஸ் ஆதரவாளர்கள் நடத்திய போராட்டத்தில் சாலை இரும்பு தடுப்புகள் உடைக்கப்பட்டது. அஸ்ஸாம் முதல்வர், ராகுல்காந்தி மக்களை இதுபோன்ற செயலுக்குத் தூண்டுவதாக குற்றம் சாட்டினார். இதையடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.