அவையில் ராகுல் போல் நடந்துகொள்ளக் கூடாது: கிரண் ரிஜிஜு!
ராகுல் போல் நடந்துகொள்ள வேண்டாம் என்று தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்பிக்களுக்கு கிரண் ரிஜிஜுஅறிவுறுத்தல்...
மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் பேச்சு தேசிய ஜனநாாயகக் கூட்டணி எம்பிக்களுக்கு பாடம் என்றும் இதுபோன்ற நடத்தைகளைத் தவிர்க்க வேண்டும் என்றும் மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.
செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல் நாடாளுமன்றக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர்,
ராகுல் காந்தி நேற்று அவையில் நடந்துகொண்டது, அவைத்தலைவரை விதிகளை மீறி அவமரியாதை செய்தது கட்சி எம்பிக்களும், என்டிஏ எம்பிக்களும் செய்யக்கூடாத ஒன்றாகும். இது நம் அனைவருக்கும் பாடம்.
பிரதமரின் உரை குறித்த விவரங்களை வழங்கிய அவர், நாடாளுமன்ற விதிகள் மற்றும் நடைமுறைகளை கடைப்பிடிக்கவேண்டியதன் முக்கியத்துவத்தை மோடி வலியுறுத்தியதாக அவர் கூறினார்.
ஒவ்வொரு எம்பியும் நாட்டின் சேவைக்காகவே நாடாளுமன்றத்துக்கு வந்துள்ளனர். அனைத்து எம்பிக்களும் ஜனநாயகத்தின் விதிகள் மற்றும் நடைமுறைகளைப் பின்பற்றி முன்மாதிரியான நாடாளுமன்றத்தின் உறுப்பினர்களாக மாற வேண்டும். அனைத்து தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்பிக்களும் நாட்டை உயர்த்திடப் பாடுபட வேண்டும்.
நாடாளுமன்ற விதிகளின்படி, மாநிலங்களின் விவகாரங்களை மக்களவையில் திறம்பட முன்வைக்கவும், தேசிய விவகாரங்களில் விவாதங்களில் ஈடுபடவும் பிரதமர் மோடி எம்பிக்களை வலியுறுத்தியதாகவும் அவர் கூறினார்.
அருங்காட்சியகத்தில் ஜவஹர்லால் நேரு முதல் பிரதமர் மோடி வரை, அனைத்து பிரதமர்களின் பயணமும் அருமையாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதில் எந்த அரசியலும் இல்லை. ஒவ்வொரு பிரதமரும், பதவியில் இருக்கும் போது, தேசத்தைக் கட்டியெழுப்புவதில் பங்களித்துள்ளனர் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
முன்னதாக பல முன்னாள் பிரதமர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை, ஆனால் நரேந்திர மோடி பிரதமரான பிறகு பிரதமர் அருங்காட்சியகம் நிறுவப்பட்டது, இது நாட்டின் அனைத்து முன்னாள் பிரதமர்களின் பணி மற்றும் சாதனைகளை எடுத்துக்காட்டுகிறது என்று அவர் மேலும் கூறினார்.