சவாலை நிறைவேற்றிய அமைச்சர்..பாஜக தோல்வியால் ராஜிநாமா!
ராஜஸ்தான் வேளாண்மை, தோட்டக்கலைத்துறை அமைச்சர் கிரோடி லால் மீனா தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.
ராஜஸ்தானில் மக்களவைத் தேர்தலில் பாஜக தோல்வியுற்றால் தனது பதவியை ராஜிநாமா செய்வேன் எனக் கூறிய ராஜஸ்தான் வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத்துறை அமைச்சர் கிரோடி லால் மீனா தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.
72 வயதான கிரோடி லால் மீனா, சமீபத்தில் நடந்து முடிந்த மக்களைவத் தேர்தலில் ராஜஸ்தானில் தனக்கென ஒதுக்கிய 7 தொகுதிகளில் ஒன்றில் தோல்வியடைந்தாலும் தனது பதவியை நாஜிநாமா செய்வதாக கூறியிருந்தார்.
வேளாண்மை, ஊரக மேம்பாடு, பேரிடர் மேலாண்மை அமைச்சரான கிரோடி லால், “மக்களவைத் தேர்தலின் போது பிரதமர் மோடி, கிழக்கு ராஜஸ்தானில் 7 இடங்களை தனக்கென ஒதுக்கியதாக” கூறினார்.
ஜூன் 4 ஆம் தேதி வெளியான தேர்தல் முடிவுகளில் 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் 25 க்கு 24 இடங்களை கைப்பற்றி இருந்த நிலையில், 2024 தேர்தலில் வெறும் 14 இடங்களிலேயே வெற்றி பெற முடிந்தது. அவருக்கு ஒதுக்கிய 7 இடங்களில் வெறும் 4 தொகுதிகளில் பாஜக வெற்றிபெற்றது. அவரின் சொந்த ஊரான தௌசா உள்ளிட்ட தொகுதிகளில் தோல்வியைத் தழுவியது. இதனால், தனது பதவியை ராஜிநாமா செய்ய முடிவெடுத்த அவர் தனது ராஜிநாமா கடிதத்தை முதல்வரிடம் சமர்பித்துள்ளார்.
ராஜஸ்தானில் கடந்த டிசம்பரில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலுக்கு பின் கிரோடி லாலும் முதல்வருக்கான போட்டியில் இருந்தார். ஆனால், மேலிடத்து உத்தரவுகளால் முதல்முறை எம்எல்ஏவான பஜன் லால் சர்மாவுக்கு அந்த வாய்ப்பு வழங்கப்பட்டது.
கிரோடி லால் மீனா 5 முறை சட்டப்பேரவை உறுப்பினராகவும், மாநிலங்களவை எம்பியாகவும் இருந்துள்ளார். மேலும், தௌசா, சவாய் மதோப்பூரில் இருந்து மக்களவை எம்பியாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.