ஐஏஎஸ் அதிகாரியின் மகள் தற்கொலை!
மகாராஷ்டிராவில் ஐஏஎஸ் அதிகாரியின் மகள் தற்கொலை
மும்பையில் ஐஏஎஸ் அதிகாரியின் மகள் தற்கொலை செய்துள்ளார்; காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
மகாராஷ்டிராவின் தெற்கு மும்பையில், சட்டப்படிப்பு படித்துவந்த லிபி என்ற பெண், இன்று (ஜூன் 3) அதிகாலை 4 மணியளவில் தற்கொலை செய்துகொண்டது அப்பகுதியில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
லிபி தெற்கு மும்பையில் உள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் அதிகாலை 4 மணியளவில், 10வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். லிபியின் தந்தை விகாஸ் ரஸ்தோகி தொழில்நுட்பக் கல்வித்துறையில் முதன்மைச் செயலாளராகவும், தாயார் ராதிகா ரஸ்தோகி ஐஏஎஸ் அதிகாரியாகவும் உள்ளனர். லிபி, கல்வியில் தனது மந்தமான செயல்திறன் குறித்து கவலைப்பட்டு, இந்த தவறான முடிவினை எடுத்திருக்கக் கூடும் என்று காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவரது மரணத்திற்கு யாரையும் குற்றம் சாட்டக்கூடாது என்று அவரது அறையில் இருந்து தற்கொலைக் குறிப்பு ஒன்றும் கிடைத்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட லிபி, அனுமதிக்கப்படுவதற்கு முன்பு இறந்துவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. பிரேத பரிசோதனைக்குப் பின், லிபியின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும் எனக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].