கேரளத்தின் கோழிக்கோடு சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஷார்ஜாவுக்கு சனிக்கிழமை செல்லவிருந்த ஏர் அரேபியா விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து விமானம் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது.
இதையடுத்து காவல் துறை அதிகாரிகள் மற்றும் வெடிகுண்டு சோதனைப்பிரிவு அதிகாரிகள் சோதனை செய்ததில் அது வதந்தி எனத் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து விமான நிலைய அதிகாரி கூறுகையில், “ஷார்ஜாவில் இருந்து கோழிக்கோடு வந்த விமானத்தில் இருந்த பயணிகளில் ஒருவர் இருக்கையில் 'வெடிகுண்டு (bomb)' என்று எழுதி வைத்திருந்தார். இது பயணிகள் ஏறுவதற்கு முன்பு ஊழியர்களால் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, காவல் துறைஅதிகாரிகள் உஷார்படுத்தப்பட்டு, விமானம் தரையிறக்கப்பட்டது. வெடிகுண்டு கண்டறியும் படையினர் விமானத்தை முழுமையாக ஆய்வு செய்தனர். சோதனை மற்றும் பாதுகாப்பு தற்போது முடிவடைந்துள்ளது. காலை 8.30 மணியளவில் புறப்பட வேண்டிய விமானம் இப்போது மாலை 5 மணியளவில் புறப்படவுள்ளது.
அனைத்து பயணிகள் விமான நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவு மற்றும் தண்ணீர் வழங்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், விமானத்தில் தனது இருக்கையில் வெடிகுண்டு (bomb) என்று எழுதிய பயணி யார் என்பது இன்னும் அடையாளம் காணப்படவில்லை. வெடிகுண்டு வதந்திக்கு பின்னால் இருப்பவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்” என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.