சட்டவிரோத மணல் கொள்ளை வழக்கு: ராஜஸ்தானில் 10 இடங்களில் சிபிஐ சோதனை!
சோதனையில் ரூ.20 லட்சத்துக்கும் அதிகமான பணம் மற்றும் நாட்டுத் துப்பாக்கியும் பறிமுதல்
ராஜஸ்தானில் சட்டவிரோதமான மணல் அள்ளுவது தொடர்பாக 10 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சனிக்கிழமை சோதனை நடத்தினர்.
ராஜஸ்தானின் ஜெய்ப்பூர், டோங்க், ஜோத்பூர், நாகவூர், பில்வாரா, கரோலி மற்றும் சிகார் ஆகிய இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.20 லட்சத்துக்கும் அதிகமான பணம் மற்றும் நாட்டுத் துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தின் ஜெய்ப்பூர் பெஞ்ச் உத்தரவின்பேரில், பண்டி காவல்துறையினரால் பதிவு செய்யப்பட்ட சட்டவிரோத மணல் வழக்கின் விசாரணை சிபிஐ ஏற்றுக்கொண்டது.
கடந்தாண்டு அக்டோபரில் ராஜஸ்தான் பதிவெண் கொண்ட வாகனத்தில் 40 மெட்ரிக் மணல் கொண்டுசெல்லும்போது, ஷாரூக் என்பவர் அனுமதியின்றி மணல் அள்ளியதாக கைது செய்யப்பட்டதாக எஃப்ஐஆரில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.