பாஜக தலைமையகத்தில் போராட்டம் நடத்த ஆம் ஆத்மிக்கு அனுமதி மறுப்பு!
பாஜக தலைமையகத்தில் போராட்டம் நடத்த ஆம் ஆத்மிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
பாஜக தலைமையகத்தில் ஆம் ஆத்மி கட்சி போராட்டம் நடத்த உள்ள நிலையில், ஆர்ப்பாட்டம் நடத்த அக்கட்சி அனுமதி பெறவில்லை என தில்லி காவல்துறை தெரிவித்துள்ளது.
மதுபானக் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கைது செய்யப்பட்டதற்கு எதிராக சனிக்கிழமை (ஜூன் 29) காலை 11.30 மணிக்கு பாஜக தலைமையகத்திற்கு ஆம் ஆத்மி கட்சி அழைப்பு விடுத்தது.
இதுகுறித்து காவல்துறை அதிகாரி கூறுகையில், “தில்லியில் உள்ள டிடியு மார்க்கில் உள்ள பாஜக தலைமையகத்தில் எந்த ஒரு போராட்டத்திற்கும் அனுமதி பெறாததால் போராட்டக்காரர்களை தடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
அந்த இடத்தில் தடுப்புகள் போடப்பட்டு துணை ராணுவப் படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். ஏற்கனவே, டிடியு மார்க்கில் ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது” என்றார்.
ஆம் ஆத்மியின் தேசிய ஒருங்கிணைப்பாளரான அரவிந்த் கேஜரிவாலை மத்திய புலனாய்வுப் பிரிவு மற்றும் அமலாக்கத்துறை இயக்குநரகம் பொய் வழக்கில் கைது செய்ததை கண்டித்து அக்கட்சியினர் சனிக்கிழமை (ஜூன் 29) போராட்டம் நடத்துவதாக கூறியது குறிப்பிடத்தக்கது.