பாஜகவை எதிர்ப்பதற்காக என் மீது 24 வழக்குகள் பதிவு: ராகுல் காந்தி
“எனது எம்பி பதவியை பறித்து, 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தார்கள்.”
பாஜகவை எதிர்த்து போராடுவதற்காக 24 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி வியாழக்கிழமை தெரிவித்தார்.
ஒடிஸாவில் நாளை மறுநாள் மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான நான்காம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இன்று மாலையுடன் பிரசாரம் நிறைவடையவுள்ளது.
இந்த நிலையில், ஒடிஸா மாநிலம் பாலசோரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பங்கேற்று ராகுல் காந்தி இன்று உரையாற்றினார்.
Advertisement
அப்போது அவர் பேசியதாவது:
“ஜெகந்நாதர் மோடியின் பக்தர் என்று பாஜக தலைவர் கூறுகிறார். இதுதான் பாஜகவின் ஆணவத்துக்கான சாட்சி. ஏழைகளுக்கு பணம் கொடுக்க ஆரம்பித்தவுடன், ஏழைகளில் பழக்கவழக்கங்களை அரசு கெடுக்கிறது என்று ஊடகவியலாளர்கள் கூறுவார்கள். ஆனால், நாங்கள் அவர்களின் பேச்சைக் கேட்க மாட்டோம். ஏனெனில், அவர்கள் அம்பானி, அதானியின் ஆட்கள். நாங்கள் நாட்டின் ஏழைகள், விவசாயிகளின் பேச்சை மட்டுமே கேட்போம்.
நான் பாஜகவுக்கு எதிராக போராடுகிறேன். அதனால், என் மீது அவதூறு மற்றும் குற்ற வழக்குகள் உள்பட 24 வழக்குகள் பதிவு செய்துள்ளனர். எனது மக்களவை உறுப்பினர் பதவியை பறித்து இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தனர். அமலாக்கத்துறை 50 மணிநேரம் என்னிடம் விசாரணை நடத்தியது. ஆனால், பாஜகவுக்கு எதிராக உண்மையில் நவீன் பட்நாயக் போராடுகிறார் என்றால், அவர் மீது ஏன் வழக்கு போடவில்லை?” எனத் தெரிவித்தார்.