முகப்பு
இந்தியா

என் மீது வைத்த நம்பிக்கையை உறுதிசெய்வேன்: பிரியங்கா காந்தி

என் மீது வைத்த நம்பிக்கையை உறுதிசெய்வேன் என்று கூறியிருக்கிறார் பிரியங்கா காந்தி

Updated On : 23 நவம்பர், 2024 at 4:29 PM
பிரியங்கா காந்தி
பகிர்:

புது தில்லி: நீங்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு மிக்க நன்றி, உங்கள் நம்பிக்கையில் நான் மூழ்கிவிட்டேன் என்று வயநாடு மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்றிருக்கும் காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

வயநாடு மக்களவைத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

சுமார் 6 லட்சம் வாக்குகளுடன் வயநாடு தொகுதியில் வெற்றி பெற்றுள்ள பிரியங்கா காந்தி, தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வயநாடு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

Advertisement

அதில், வயநாடு தொகுதியைச் சேர்ந்த என் அன்புச் சகோதரிகள் மற்றும் சகோதரர்களே, நீங்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு மிக்க நன்றி. அதில் நான் மூழ்கியேவிட்டேன். இந்த வெற்றி உங்கள் வெற்றியாக இருப்பதை விரைவில் நீங்கள் உண்மையிலேயே உணர்வீர்கள் என்று உறுதியளிக்கிறேன்..

உங்களைப் பிரதிநிதித்துவப்படுத்த நீங்கள் தேர்ந்தெடுத்த ஒருவர், உங்கள் நம்பிக்கைகளையும் கனவுகளையும் புரிந்துகொண்டு உங்களுக்காக போராடுவதை உறுதி செய்வதன் மூலம், என்னை உங்களில் ஒருவராகவே நீங்கள் உணர்வீர்கள் என்று உறுதி செய்கிறேன். நாடாளுமன்றத்தில் உங்கள் குரலாக இருக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்!

இந்த மரியாதையை எனக்கு வழங்கியதற்கு நன்றி, மேலும் நீங்கள் எனக்கு அளித்த அளவற்ற அன்புக்கும் நன்றி என்று கூறியிருக்கிறார்.

ஐக்கிய ஜனநாயக முன்னணியில் உள்ள எனது சகாக்கள், கேரளம் முழுவதும் உள்ள தலைவர்கள், தொண்டர்கள், தன்னார்வலர்கள் மற்றும் வயநாடு தேர்தல் பிரசாரத்தில் நம்பமுடியாத அளவுக்குக் கடினமாக உழைத்த எனது அலுவலக ஊழியர்கள் என அனைவரின் ஆதரவுக்கும் மிக்க நன்றி.

ஒரு நாளைக்கு 12 மணிநேரம் (உணவு இல்லாமல் ஓய்வு இல்லாமல்) கார் பயணங்களை மேற்கொண்டும், நாம் அனைவரும் நம்பும் இலட்சியங்களுக்காக உண்மையான வீரர்களைப் போல போராடியதற்காக உங்கள் அனைவருக்கும் நன்றி.

எனது தாய், ராபர்ட் வதேரா மற்றும் எனது இரண்டு பொக்கிஷங்களான - ரைஹான் மற்றும் மிராயா ஆகியோர், எனக்கு அளித்த அன்புக்கும் தைரியத்திற்கும் எந்த நன்றியும் போதாது. என் சகோதரர் ராகுல்.. நீங்கள் அனைவரையும் விட துணிச்சல் மிக்கவர்... எனக்கு வழி காட்டியாகவும் என் பின்னால் பலமாக இருப்பதற்கும் எப்போதும் நன்றி என்று குறிப்பிட்டிருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.