உலக பயங்கரவாத தாக்குதல்களில் பாகிஸ்தானின் கைரேகை! ஐ.நா.வில் இந்தியா சாடல்
‘உலகெங்கும் நடைபெறும் பயங்கரவாத தாக்குதல்களில் பாகிஸ்தானின் கைரேகை பதிந்துள்ளது’
‘உலகெங்கும் நடைபெறும் பயங்கரவாத தாக்குதல்களில் பாகிஸ்தானின் கைரேகை பதிந்துள்ளது’ என்று ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் இந்தியா கடுமையாக சாடியது.
மேலும், ‘இந்தியாவுக்கு எதிரான எல்லை தாண்டிய பயங்கரவாதத்தைத் தூண்டிவிடுவது தவிா்க்க இயலாத விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை பாகிஸ்தான் உணர வேண்டும்’ என்றும் இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் ஜம்மு-காஷ்மீா் குறித்து பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் பேசியதற்கு பதிலளிக்கும் வகையில் இந்தக் கருத்தை இந்தியா தெரிவித்தது.
79-ஆவது ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் உரையாற்றிய ஷாபாஸ் ஷெரீஃப், ‘பாலஸ்தீன மக்களைப்போலவே ஜம்மு- காஷ்மீா் மக்களும் தங்கள் விடுதலைக்காக பல ஆண்டுகளாகப் போராடி வருகின்றனா். ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப் பிரிவு 370-ஐ ரத்து செய்த முடிவை இந்தியா திரும்பப் பெற வேண்டும். ஐ.நா. பாதுகாப்பு தீா்மானங்கள் அடிப்படையில் அமைதிப் பேச்சுவாா்த்தை நடத்தி இந்த விவகாரத்துக்கு தீா்வு காண முன்வர வேண்டும்’ என்றாா்.
ஷாபாஸ் ஷெரீஃபின் கருத்துக்கு பதிலளித்து ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் வெள்ளிக்கிழமை உரையாற்றிய இந்தியாவுக்கான தூதா் பவிகா மங்களானந்தன் பேசியதாவது:
பயங்கரவாதம், போதைப் பொருள் வா்தத்கம், நாடுகடந்த குற்றச் செயல்களுக்கு புகழ்பெற்ற, ராணுவத்தால் நடத்தப்படும் ஒரு நாடு, உலகின் மிகப் பெரிய ஜனநாயகத்தை தாக்கும் துணிச்சலைக் கொண்டுள்ளது.
அண்டை நாடுகளுக்கு எதிராக எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஒரு கருவியாக நீண்ட காலமாக பாகிஸ்தான் பயன்படுத்தி வருவதை இந்த உலகம் அறியும். இந்திய நாடாளுமன்றத்தின் மீதும், பொருளாதார தலைநகரமான மும்பை மீதும் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தியது. இந்தப் பட்டியல் இன்னும் நீளமானது. அத்தகைய நாடு வன்முறை குறித்துப் பேசுவது, மிக மோசமான கபடநாடகமாகும்.
இரு நாடுகளிடையேயான பிரச்னைக்குத் தீா்வு காணும் வகையில் பாகிஸ்தான் முன்மொழிந்த பரஸ்பர உடன்பாட்டை இந்தியா நிராகரித்துவிட்டதாக ஷாபாஸ் ஷெரீஃப் குறிப்பிட்டுள்ளாா். பயங்கரவாதத்துடன் எந்தவொரு ஒப்பந்தத்தையும் மேற்கொள்ள முடியாது. இந்தியாவுக்கு எதிரான எல்லை தாண்டிய பயங்கரவாதத்தைத் தூண்டிவிடுவது தவிா்க்க இயலாத விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை பாகிஸ்தான் உணர வேண்டும்.
அல்-காய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவா் ஒஸாமா பின்லேடனுக்கு நீண்டகாலமாக பாகிஸ்தான் தஞ்சம் அளித்ததை சா்வதேச சமூகத்துக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். அந்த வகையில், உலகெங்கும் நடைபெறும் பயங்கரவாத தாக்குதல்களில் பாகிஸ்தானின் கைரேகை பதிந்துள்ளது.
தொடா்ந்து பொய்களைப் பரப்பி உண்மையை மறைக்க பாகிஸ்தான் முயற்சிக்கிறது என்பதை உலகம் அறியும். எனவே, பாகிஸ்தான் பிரதமரின் பேச்சு ஏற்றுக்கொள்ள முடியாதது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
இந்திய பகுதி மீது பாகிஸ்தான் பேராசை கொண்டுள்ளது. தற்போது, இந்தியாவின் பிரிக்க முடியாத, ஒருங்கிணைந்த பகுதியான ஜம்மு-காஷ்மீரில் தோ்தலை சீா்குலைக்க பயங்கரவாதத்தை தொடா்ந்து பயன்படுத்தி வருகிறது என்றாா்.