அட்டாரி - வாகா எல்லை மூடல்: இந்திய இளைஞரின் திருமணம் ஒத்திவைப்பு!
அட்டாரி - வாகா எல்லை மூடப்பட்டதினால் இந்திய இளைஞரின் திருமணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதைப் பற்றி...
பஞ்சாப் மாநிலத்தில் அமைந்துள்ள இந்திய எல்லை மூடப்பட்டதினால் ராஜஸ்தானைச் சேர்ந்த இளைஞர் ஒருவரின் திருமணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பஹல்காமில் சுற்றுலாப் பயணிகளின் மீது நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து பஞ்சாபின் அமிர்தசரஸ் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்தியா - பாகிஸ்தான் எல்லையான அட்டாரி - வாகா எல்லையை மூட மத்திய அரசு நேற்று (ஏப்.23) இரவு உத்தரவிட்டது.
இந்தியாவிலுள்ள பாகிஸ்தானியர்கள் வெளியேற காலக்கெடு விதிக்கப்பட்டதுடன், அந்நாட்டிலுள்ள இந்தியர்களைத் தாயகம் திரும்பவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், உரிய ஆவணங்களுடன் அட்டாரி - வாகா எல்லையைக் கடந்த நபர்கள் இந்தியாவுக்கு வரும் மே.1 ஆம் தேதிக்குள் திரும்பிவர உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஷைத்தன் சிங் என்ற இளைஞருக்கு இன்று (ஏப்.24) பாகிஸ்தானில் திருமணம் நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது. அதற்காக, அவர் தனது குடும்பத்தினருடன் அட்டாரி - வாகா எல்லை வழியாக இன்று பாகிஸ்தான் செல்லவிருந்தார்.
ஆனால், தற்போது அந்த எல்லையானது மூடப்பட்டதினால் அவரது திருமணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அவரது சகோதரரான சுரீந்தர் சிங் கூறுகையில், அவர்களது பாட்டியும் அவரது மூன்று மகன்கள் பாகிஸ்தானிலும், ஒரு மகன் மட்டும் இந்தியாவில் வசித்து வருவதாகவும், அவர் கூறியுள்ளார்.
மேலும், ஷைத்தன் சிங்கின் திருமணத்திற்காக இன்று அவர்கள் பாகிஸ்தான் செல்லத் திட்டமிட்டிருந்ததாகவும் ஆனால் தற்போது அவரது திருமணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் கூறிய அவர் ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதிகள் செய்தது மிகவும் தவறான ஒன்று எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க:நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான முக்கிய அறிவிப்பு வெளியீடு!