முகப்பு
இந்தியா

ஆபரேஷன் சிந்தூர் திட்டமிடப்பட்டது எவ்வாறு? புதிய விடியோக்கள் வெளியீடு

ஆபரேஷன் சிந்தூர் திட்டமிடப்பட்டது எவ்வாறு என்பது குறித்த புதிய விடியோக்கள் வெளியிடப்பட்டுள்ளது.

Updated On : 30 ஆகஸ்ட், 2025 at 10:14 AM
ஆபரேஷன் சிந்தூர் - கோப்புப் படம்
பகிர்:

இந்தியா - பாகிஸ்தான் எல்லையில், பயங்கரவாத முகாம்கள் மீது, இந்திய முப்படைகள் இணைந்து நடத்திய ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான புதிய விடியோக்கள் வெளியாகியிருக்கின்றன.

புது தில்லியில் இன்று நடைபெற்ற என்டிடிவி தற்காப்புக் கருத்தரங்கில், விமானப் படை ஏர் மார்ஷல் நர்மதேஷ்வர் திவாரி, ஆபரேஷன் சிந்தூர் பற்றிய புதிய விடியோக்களை வெளியிட்டு அவற்றின் விவரங்களைத் தெரிவித்துள்ளார்.

ஜம்மு - காஷ்மீர் மாநிலம் பஹல்காமில், சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக இந்திய நடத்தியதே ஆபரேஷன் சிந்தூர்.

ஆபரேஷன் சிந்தூர் திட்டமிடப்பட்டது எப்படி, செயல்படுத்தப்பட்டது எவ்வாறு மற்றும் அதன்பிறகான தாக்குதல்கள் குறித்து புதிய விடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு விவரித்திருக்கிறார் ஏர் மார்ஷல் நர்மதேஷ்வர் திவாரி.

ஆபரேஷன் சிந்தூர், மிகச் சிறந்த திருப்புமுனையாக அமைந்த தருணம் என்றும், விமானப் படை, இந்தியாவின் போர் வாள் என்பதை உறுதி செய்வதற்கான வாய்ப்பாக அமைந்ததாக திவாரி குறிப்பிட்டுள்ளார்.

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது, இந்திய படைகளின் தாக்குதல் நமது ஒட்டுமொத்த படை பலத்துக்கும் ஒரு சிறிய சான்றுதான். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு, பொது வெளியில் இதுபற்றி பேசுவது இதுவே முதல் முறை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய விமானப் படைக்கு, இரண்டு முக்கிய இலக்குகள் கொடுக்கப்பட்டன. ஒன்று, பாகிஸ்தானின் உள்ளே இருக்கும் முரித்கேவில் உள்ள லஷ்கர்-ஏ-தொய்பா தலைமையிடம், இது சர்வதேச எல்லையிலிருந்து சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவில் இருந்தது, மற்றொன்று பஹவல்பூர் - இங்கு ஜெய்ஷ்-ஏ-முகமது தலைமையிடம் அமைந்திருந்தது. இதுவும் பாகிஸ்தானுக்குள் சுமார் 100 கிலோ மீட்டர் தொலைவில் இருந்தது.

இந்திய ராணுவத்துக்கு, எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டருகே சுமார் 7 கூடுதல் இலக்குகள் வழங்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு இலக்குகளும் எங்களுக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் துல்லியமாக தாக்குதல் நடத்துவது மற்றும் குறைந்த இழப்புகளை நோக்கமாகக் கொண்டு திட்டமிடப்பட்டது. ஒவ்வொரு பாதுகாப்புத் தளவாடங்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டோம்.

முரித்கேவில், நிர்வாகப் பிரிவு கட்டடம் மற்றும் இரண்டு தலைவர்களின் வீடுகள் மீது குண்டுகள் போடப்பட்டன. டிரோன் மூலம் எடுத்த பதிவுகளில், முதற்கட்ட தாக்குதலில், அந்தக் கட்டடத்தின் மேல் பகுதியில் சிறிய ஓட்டை மட்டுமே விழுந்திருந்தது தெரிய வந்தது. அதன்பிறகே, உள்பகுதிகளில் எடுக்கப்பட்ட விடியோக்கள் மூலம், கட்டடத்தின் உள்பகுதி ஒட்டுமொத்தமாக சேதமடைந்து, கட்டடம் நொறுங்கியிருப்பது தெரிய வந்தது.

பஹவல்பூரை எடுத்துக் கொண்டால், ஐந்து இடங்கள் குறி வைத்துத் தாக்கப்பட்டன, நிர்வாகப் பிரிவு கட்டடம், உறுப்பினர்களின் வீடுகள், தலைவர்களின் தங்குமிடங்கள் என்பன அவை. அங்கு மிக முக்கிய ஆயுதத்தால் நடத்தப்பட்ட துல்லிய தாக்குதல், பல அடுக்கு தளங்களை ஊடுருவி தாக்கி, கட்டளை மையத்தையே அழித்திருந்தது.

பல ஆயிரம் வார்த்தைகள் சொல்வதை விட ஒரு புகைப்படம் பேசிவிடும் என்று கூறிய ஏர் மார்ஷல் திவாரி, முக்கிய பயங்கரவாத தலைவர்களின் இறுதிச் சடங்கில், பாகிஸ்தான் உயர் அதிகாரிகள், காவல்துறை உயர் அதிகாரிகள் என பலரும் பங்கேற்றிருந்த புகைப்படத்தைக் காட்டினார். இது, பாகிஸ்தான் அரசு, நேரடியாக பயங்கரவாதத்தை ஊக்குவிக்கிறது என்பதற்கான சாட்சி என்றும் கூறினார்.

மேலும், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையால், பாகிஸ்தான் உடனடியாக தாக்குதலை நிறுத்தக் கோரியது. மே 10ஆம் தேதி இரு தரப்பும் ஒப்புக் கொண்டு, இந்தியா - பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் ஏற்பட்டது. முப்படைகள் நடத்தி வந்த தாக்குதல் நிறுத்தப்பட்டது என்றார்.

summary

New videos have been released showing how Operation Sindoor was planned.

முழு கட்டுரையைப் படிக்க →