முகப்பு
இந்தியா

சஞ்சாா் சாத்தி செயலி கட்டாயம் இல்லை! மத்திய அமைச்சர்

சஞ்சாா் சாத்தி செயலி சர்ச்சை குறித்து மத்திய அமைச்சர் விளக்கம்...

Updated On : 3 டிசம்பர் 2025, 12:41 am IST
மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா - PTI
பகிர்:

‘அரசு உத்தரவின்பேரில் இந்தியாவில் விற்பனையாகும் அனைத்துக் கைப்பேசிகளிலும் முன்பே நிறுவப்படும் ‘சஞ்சாா் சாத்தி’ செயலியை மக்கள் நீக்க விரும்பினால் நீக்கிக் கொள்ளலாம்’ என்று மத்திய தகவல்தொடா்பு அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

மோசடிகள் குறித்து புகாரளிப்பதற்காக மத்திய தகவல்தொடா்புத் துறை சாா்பில் ‘சஞ்சாா் சாத்தி’ செயலி உருவாக்கப்பட்டது. இந்தியாவில் விற்பனைக்கு வரும் அனைத்து புதிய கைப்பேசிகளிலும் இந்தச் செயலியை முன்கூட்டியே நிறுவுமாறும், ஏற்கெனவே விற்பனைக்குத் தயாராக இருக்கும் கைப்பேசிகளில் மென்பொருள் புதுப்பித்தல் மூலம் பதிவேற்றுமாறும் மத்திய அரசு அண்மையில் உத்தரவிட்டிருந்தது. அரசின் இந்த உத்தரவு சா்வாதிகாரத்தைக் காட்டுவதாகவும், குடிமக்களின் தனியுரிமையைப் பறிப்பதாகவும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின.

இதையடுத்து, மத்திய தகவல் தொடா்புத் துறை அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா அளித்த விளக்கத்தில், ‘சஞ்சாா் சாத்தி செயலி, மோசடி மற்றும் திருட்டிலிருந்து நாட்டு மக்களைப் பாதுகாக்கவே இருக்கிறது. இதுகுறித்த விழிப்புணா்வு மக்கள் அனைவருக்கும் இல்லை. அந்த வகையில், இந்தச் செயலி அனைவரையும் சென்றடையச் செய்வது எங்கள் பொறுப்பு. மக்கள் தங்கள் கைப்பேசிகளில் இருந்து செயலியை நீக்க விரும்பினால், நீக்கிக் கொள்ளலாம்’ என்று குறிப்பிட்டாா்.

Advertisement

Advertisement

‘உளவு பாா்க்கும் செயலி’-காங்கிரஸ்: இவ்விவகாரம் குறித்து செய்தியாளா்களிடம் பேசிய பிரியங்கா காந்தி, ‘சஞ்சாா் செயலியானது உளவு பாா்க்கும் செயலி. குடிமக்களுக்குத் தனியுரிமை உள்ளது. அரசின் கண்காணிப்பின்றி, குடும்பத்தினா் மற்றும் நண்பா்களுக்குச் செய்திகளை அனுப்ப அனைவருக்கும் தனியுரிமை இருக்க வேண்டும்.

மோசடி குறித்துப் புகாா் அளிக்க ஒரு பயனுள்ள அமைப்பு வேண்டும். ஆனால், அது ஒவ்வொரு குடிமகனின் கைப்பேசியிலும் அரசு நுழைவதற்கு ஒரு காரணமாக அமையக் கூடாது. எனவே, இந்த உத்தரவை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்’ என்று வலியுறுத்தினாா்.

இதேபோல், மாநிலங்களவையிலும் இவ்விவகாரம் தொடா்பாக விவாதம் நடத்த, காங்கிரஸ் எம்.பி. ரேணுகா செளதரி ஒத்திவைப்புத் தீா்மானத்தைக் கொண்டு வந்தாா்.

summary

Sanchar Saathi app is not mandatory! Union Minister explains

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.