திருவனந்தபுரத்தில் பாஜக வெற்றி! பிரதமர் மோடி நன்றி!
திருவனந்தபுரத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதாக பிரதமர் மோடி நன்றி
கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதாக பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரத்தில் பாஜக வெற்றிபெற்ற நிலையில், பிரதமர் மோடி நன்றி தெரிவித்து, "கேரள மாநிலத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் பாஜக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களித்த கேரள மக்களுக்கு எனது நன்றி.
கேரளத்தில் யுடிஎஃப் மற்றும் எல்டிஎஃப் ஆகியவற்றால் மக்கள் வெறுப்படைந்துள்ளனர். ஆகையால், நல்லாட்சியை வழங்கவும், அனைவருக்கும் வாய்ப்புகளைக் கொண்ட கேரளத்தை உருவாக்கவும் ஒரே வழி தேசிய ஜனநாயகக் கூட்டணி மட்டுமே என்று மக்கள் தீர்மானித்தனர்.
திருவனந்தபுரம் மாநகராட்சியில் பாஜக - தேசிய ஜனநாயக கூட்டணிக்கு கிடைத்த வெற்றி கேரள அரசியலில் ஒரு திருப்புமுனை தருணம்.
மாநிலத்தின் வளர்ச்சிக்கான திட்டங்களை பாஜகவால் மட்டுமே நிறைவேற்ற முடியும் என்பதில் மக்கள் உறுதியாக உள்ளனர். திருவனந்தபுரத்தின் வளர்ச்சியை நோக்கி எங்கள் கட்சி பாடுபட்டு, மக்களின் வாழ்க்கையை எளிதாக்க ஊக்குவிக்கும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
கேரள மாநிலத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பெரும்பாலான தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை வகித்து வருகிறது. இருப்பினும், தலைநகர் திருவனந்தபுரத்தில் பாஜகவே வெற்றி பெற்றது.
திருவனந்தபுரத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் 45 ஆண்டுகால வெற்றி வரலாற்றை முறியடித்து, முதன்முறையாக பாஜக வெற்றி பெற்றது.
இதையும் படிக்க: மகாத்மா காந்தி பெயரில் என்ன தவறு? நேருவைத் தொடர்ந்து காந்தியையும் வெறுக்கும் பாஜக! - ஜெய்ராம் ரமேஷ்