இந்தியா - அமெரிக்கா இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானதற்கு அமெரிக்க அதிபர் டிரம்புக்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.
ரஷியாவிடம் இருந்து தொடர்ந்து இந்தியா எண்ணெய் வாங்கி வருவதைக் கண்டித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், முதலில் 25 சதவிகித வரியையும் பின்னர் கூடுதலாக 25 சதவிகித அபராத வரியையும் விதித்திருந்தார்.
அதைத் தொடர்ந்து ரஷியாவின் எண்ணெய்யை வாங்குவதை நிறுத்த இந்தியா ஒப்புக் கொண்டுள்ளதாகவும், இதனால் இந்திய- அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுவிட்டதாகவும் இந்தியா மீதான 25 சதவிகித அபராத வரியை 18 சதவிகிதமாக குறைப்பதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த திங்கள்கிழமை (பிப். 2) தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், ரஷிய எண்ணெய் வாங்குவதற்கு எதிராக இந்தியா மீது விதித்த 25 சதவிகித அபராத வரியை ரத்து செய்யும் உத்தரவில் அதிபர் டிரம்ப் சனிக்கிழமை கையெழுத்திட்டார். அவரின் உத்தரவுக்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், “இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கு சிறப்பான செய்தி! நமது இரு நாடுகளுக்கு இடையே நாங்கள் இடைக்கால ஒப்பந்தம் செய்திருக்கிறோம். நமது நாடுகளுக்கு இடையேயான ஒப்பந்தத்தின் அர்ப்பணிப்புக்காக அமெரிக்க அதிபர் டிரம்ப்க்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கு இடையேயான நம்பிக்கையையும், ஆழமான பங்களிப்பையும் பிரதிபலிக்கிறது. இந்தியாவில் சிறு, குறு விவசாயிகள், தொழில்முனைவோர், ஸ்டார்ட் அப் நிறுவனர்கள், மீனவர்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்குவதன் மூலம், மேக் இந்தியா திட்டம் வலுவாகிறது. இதனால், பெண்களுக்கும் இளைஞர்களுக்கும் அதிகளவிலான வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.