பாஜக அதிக இடங்களில் வென்றிருந்தால் இட ஒதுக்கீட்டுக்கும் அரசமைப்புக்கும் பாதுகாப்பு இருந்திருக்காது: ரேவந்த் ரெட்டி
பாஜக 400 இடங்களில் வெல்லாததால் இட ஒதுக்கீடும் அரசமைப்பும் காக்கப்பட்டது: ரேவந்த் ரெட்டி
பாஜக 400 இடங்களை வெல்லாமல் அதற்கும் குறைவான இடங்களில் வென்றதால்தான், இட ஒதுக்கீடும் அரசமைப்பும் பாதுகாக்கப்பட்டுள்ளது என்று தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பேசியிருக்கிறார்.
வாக்குத் திருட்டுக்கு எதிராக ஞாயிற்றுக்கிழமை(டிச. 14) காங்கிரஸ் போராட்டத்தில் ஈடுபடுவதையடுத்து, இந்தப் போராட்டத்தில் பங்கேற்க அக்கட்சியின் பல்வேறு மாநில தலைவர்கள் தலைநகரைச் சென்றடைந்ததுடன் மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான கூட்டணி அரசுக்கு எதிரான விமர்சனங்களை சுமத்தினர்.
இந்த நிலையில், தில்லி போராட்டத்தில் கலந்துகொண்ட தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பேசும்போது, “கோல்வால்கரின் சித்தாந்தத்தின் அடிப்படையில் அமைந்துள்ள நரேந்திர மோடி அரசு, அதே சித்தாந்தத்தை விதிக்கப் பார்க்கிறது.
Advertisement
Advertisement
இதற்காகவே அவர்கள் 400 இடங்களைக் கைப்பற்றத் துடித்தார்கள். ஆனால், 240 இடங்களில் நிறுத்தப்பட்டுவிட்டனர். இதனாலேயே, இட ஒதுக்கீடும் அரசமைப்பும் பாதுகாக்கப்பட்டுள்ளது.
தலித்கள், ஆதிவாசிகள், சிறுபான்மையினர் ஆகிய மக்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டால், அதன்பின், ஆதார் அட்டையிலிருந்தும் ரேஷன் அட்டையிலிருந்தும் அவர்களது பெயர்களை பாஜக நீக்கிவிடும். அதனைத்தொடர்ந்து, அவர்களின் சொத்துகளை பறித்துக்கொள்ளும். ஆதிவாசிகள் அனைத்தையும் இழந்துவிடுவர்.
ராகுல் காந்தியும் மல்லிகார்ஜுன் கார்கேவும் ஆர்எஸ்எஸ்-இன் கோல்வால்கரின் சிந்தனைக்கு எதிராக, மோடி-ஷாவை எதிர்த்துப் போராடுகிறார்கள். ராகுல் காந்தி ஒரு வீரராகப் போராடுகிறார். நாம் அவருக்கு பலம் சேர்க்க வேண்டும்” என்றார்.