நாட்டின் அரசு முறைமை விவசாயிகளை அமைதியாகவும் தொடர்ச்சியாகவும் கொன்று வருவதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
மகாராஷ்டிர சட்டப்பேரவையில் விவசாயிகளின் தொடர் தற்கொலைகள் குறித்து காங்கிரஸ் எழுப்பிய கேள்விக்கு மாநில அரசு அளித்த பதில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தாண்டு ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான மூன்று மாதங்களில் மட்டும் 767 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ’தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ வெளியிட்ட செய்தியைப் பகிர்ந்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசை விமர்சித்துள்ளார்.
ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது:
“கற்பனை செய்து பாருங்கள், கடந்த 3 மாதங்களில் மட்டும் மகாராஷ்டிர மாநிலத்தில் 767 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இது வெறும் புள்ளிவிவரம் அல்ல, 767 குடும்பங்களின் மீள முடியாத துயரம். ஆனால், அரசு அமைதியாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டுள்ளது.
விவசாயிகள் ஒவ்வொரு நாளும் கடனில் மூழ்கி வருகின்றனர். விதைகள், உரங்கள், டீசல் என அனைத்து அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், குறைந்தபட்ச ஆதார விலை மட்டும் இல்லை.
கடன் தள்ளுபடி கோரும் போதெல்லாம் நிராகரிக்கப்படுகிறது. ஆனால், கோடீஸ்வரர்களின் கடன்களை எளிமையாக மோடி அரசாங்கள் தள்ளுபடி செய்கிறது. இன்றைய செய்தியில்கூட அனில் அம்பானி ரூ. 48,000 கோடி மோசடி செய்ததாக எஸ்பிஐ அறிவித்துள்ளது.
விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பு ஆக்குவேன் என்று மோடி வாக்குறுதி அளித்தார். ஆனால், பாதியாக குறைக்கப்பட்டுள்ளது.
இந்த அரசு முறையை (System) விவசாயிகளை அமைதியாகவும் தொடர்ச்சியாகவும் கொன்று வருகிறது. ஆனால், மோடி தனக்கான விளம்பரப் பணியில் பிஸியாக இருக்கிறார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Leader of the Opposition in the Lok Sabha, Rahul Gandhi, has accused the country's system of silently killing farmers.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.