முகப்பு
இந்தியா

அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்ட ஏர் இந்தியா கருப்புப் பெட்டி!

ஏர் இந்தியா விமானத்தின் கருப்புப் பெட்டி அமெரிக்கா அனுப்பப்பட்டது பற்றி...

Updated On : 19 ஜூன் 2025, 10:29 am IST
ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளான பகுதி. - PTI
பகிர்:

அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் கருப்புப் பெட்டி அமெரிக்காவுக்கு ஆய்வுக்காக அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குஜராத் மாநிலம், அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து கடந்த வாரம் லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட சில நொடிகளில் கீழே விழுந்து வெடித்துச் சிதறியதில் 270 பேர் பலியாகினர்.

இந்த விபத்துக்கான காரணம் விமானிகளா? தொழில்நுட்பக் கோளாறா? பறவைகள் மோதியது காரணமா? அல்லது வேறேதும் பிரச்னையா? எனப் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.

Advertisement

Advertisement

இதற்கான பதில், விமானத்தின் கருப்புப் பெட்டியில் உள்ள விமானத் தரவுப் பதிவு, காக்பிட் குரல் பதிவு உள்ளிட்டவையை ஆராய்ந்தால் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விபத்து பகுதியில் இருந்து மீட்கப்பட்ட கருப்புப் பெட்டியின் வெளிப்புறத்தில் அதிகளவில் சேதம் ஏற்பட்டிருப்பதால் தரவுகளை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தில்லியில் உள்ள விமான விபத்து புலனாய்வுப் பணியகத்தின் ஆய்வகத்துக்கு கொண்டு செல்லப்பட்ட கருப்புப் பெட்டியில் இருக்கும் தரவுகளை மீட்பதில் இந்திய வல்லுநர்களுக்கு சிரமம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், வாஷிங்டனில் உள்ள தேசிய பாதுகாப்பு போக்குவரத்து வாரியத்தின் ஆய்வகத்தில் பெரும் சேதத்துக்கு உள்ளான கருப்புப் பெட்டியில் இருந்து தரவுகளை மீட்கும் தொழில்நுட்பம் உள்ளதால், ஏர் இந்தியாவின் கருப்புப் பெட்டி அமெரிக்காவுக்கு கொண்டு செல்லப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.