ஹிமாசலில் மேகவெடிப்பு! வெள்ளத்தால் உயரும் உயிர் பலிகள்.. 20 பேர் மாயம்!
ஹிமாசலில் மேகவெடிப்பால் ஏற்பட்ட வெள்ளம் குறித்து...
ஹிமாசல பிரதேசத்தின் காங்கரா மற்றும் குலு ஆகிய மாவட்டங்களில் மேகவெடிப்பால் பெய்த கனமழையால், வெள்ளம் ஏற்பட்டு 20 பேர் மாயமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
காங்கரா மற்றும் குலு ஆகிய மாவட்டங்களில், நேற்று (ஜூன் 25) மாலை மேகவெடிப்பு ஏற்பட்டு, கனமழை பெய்துள்ளது. இதனால், அங்குள்ள பகுதிகளில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் ஏராளமானோர் அடித்துச் செல்லப்பட்டனர்.
இந்நிலையில், காங்கராவிலுள்ள இந்திர பிரியதர்ஷினி நீர்மின் திட்டப் பகுதியில், பணியில் ஈடுபட்டிருந்த சுமார் 15 - 20 தொழிலாளர்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். மேலும், வெள்ளத்தில் பலியான 2 தொழிலாளர்களின் உடல்கள் நேற்று மாலை மீட்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, இன்று (ஜூன் 26) காலை முதல் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டு வந்ததில்; மேலும் 2 தொழிலாளிகளின் உடல்கள் மீட்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதன்மூலம், வெள்ளத்தில் பலியானோரது எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ள நிலையில், மாயமான 8 பேரை தேடும் பணிகள் தற்போது தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இத்துடன், குலு மாவட்டத்தில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படும் 14 வயதுடைய சிறுவன் உள்பட 3 பேரையும் தேடி வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியில் மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். கடுமையான பாறைகள் மற்றும் சமநிலை இல்லாத நிலப்பரப்பினால் அப்பகுதியில் மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவது சிரமமாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், தொடர்ந்து நடைபெற்று வரும் மீட்புப் பணிகளால், வெள்ளம் ஏற்பட்ட பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்ட மக்களின் எண்ணிக்கைகள் குறித்து எந்தவொரு தகவலும் இதுவரை வெளியிடப்படவில்லை.
SUMMARY
Cloudburst floods in Himachal Pradesh! Death toll rises, 20 people missing!
இதையும் படிக்க: அகமதாபாத் விமான விபத்து: கறுப்புப் பெட்டியில் இருந்து தரவுகள் மீட்பு!