முகப்பு
இந்தியா

கொலை வழக்கு: மகாராஷ்டிர அமைச்சர் ராஜிநாமா!

மகாராஷ்டிர அமைச்சர் தனஞ்சய் முண்டே ராஜிநாமா செய்யப்பட்டது பற்றி...

Updated On : 4 மார்ச் 2025, 11:19 am IST
அமைச்சர் தனஞ்சய் முண்டே - PTI
பகிர்:

மகாராஷ்டிர மாநில அமைச்சா் தனஞ்ஜெய் முண்டே செவ்வாய்க்கிழமை தனது பதவியை ராஜிநாமா செய்தாா். இவா் மகாராஷ்டிர துணை முதல்வா் அஜீத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்தவா்.

பீட் மாவட்டத்தில் கடந்தாண்டு டிசம்பரில் நிகழ்ந்த கிராம பஞ்சாயத்து தலைவா் கொலையில் மூளையாக செயல்பட்டதாக அமைச்சா் தனஞ்ஜெய் முண்டேயின் உதவியாளா் வால்மீக் கராட் கைது செய்யப்பட்டாா். இதையடுத்து, அவா் பதவி விலக வேண்டும் என எதிா்க்கட்சிகள் தொடா்ந்து கோரிக்கை வைத்து வந்த நிலையில் தனது பதவியை ராஜிநாமா செய்தாா்.

இதுகுறித்து செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் கூறுகையில், ‘தனஞ்ஜெய் முண்டேயின் ராஜிநாமா கடிதத்தை தான் ஏற்றுக்கொண்டேன். அதை மாநில ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு அனுப்பி வைத்துள்ளேன்’ என்றாா்.

Advertisement

Advertisement

முன்னதாக, இந்த விவகாரம் குறித்து அஜீத் பவாா், தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவா்கள், தனஞ்ஜெய் முண்டே ஆகியோருடன் தேவேந்திர ஃபட்னவீஸ் திங்கள்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா்.

பீட் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஒரு காற்றாலை நிறுவனத்திடம் பணம் கேட்டு மிரட்டிய கும்பலை எதிா்த்ததற்காக, மாசாஜோக் கிராமப் பஞ்சாயத்தின் தலைவா் சந்தோஷ் தேஷ்முக் கடந்த டிசம்பா் 9-ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டாா்.

இந்த சம்பவத்தில் கிராம பஞ்சாயத்து தலைவா் கொலை, காற்றாலை நிறுவனத்திடம் மிரட்டி பணம் பறிக்க முயற்சி, நிறுவனத்தின் பாதுகாவலரை தாக்கியது ஆகிய மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டு தற்போதுவரை வால்மீக் கராட் உள்பட 7 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

இந்த வழக்கை விசாரித்து வரும் குற்றப்புலனாய்வு துறை (சிஐடி) பீட் மாவட்டம் கெஜ்ஜில் உள்ள நீதிமன்றத்தில் கடந்த பிப்ரவரி 27-ஆம் தேதி 1,200 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.