ஆபரேஷன் சிந்தூர்: பஞ்சாப்பில் 6 மாவட்டங்களின் பள்ளிகள் மூடல்!
பஞ்சாப் மாநிலத்தில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதைப் பற்றி...
இந்தியா - பாகிஸ்தான் இடையிலான பதற்றமான சூழலினால் பஞ்சாப் மாநிலத்திலுள்ள 6 மாவட்டங்களின் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்களின் பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளின் மீது இந்திய ராணுவம் கடந்த மே 6 ஆம் தேதி நள்ளிரவு அதிரடி தாக்குதல்கள் நடத்தியது. ‘ஆபரேஷன் சிந்தூர்’ எனப் பெயரிடப்பட்ட இந்த தாக்குதல்களின் மூலம் பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, பாகிஸ்தான் - இந்தியா ஆகிய இருநாடுகளுக்கு இடையில் போர்ப் பதற்றம் நிலவி வருவதினால் எல்லையோரத்தில் அமைந்துள்ள பஞ்சாப் மாநிலத்தின் 6 மாவட்டங்களின் பள்ளிகள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், பஞ்சாப்பின் ஃபெரோஸ்பூர், பதான்கோட், ஃபஸில்கா, அமிர்தசரஸ், குருதாஸ்பூர், தார்ன் தரன் ஆகிய பஞ்சாப்பின் எல்லையோர மாவட்டங்களின் பள்ளிகள் மே.8 முதல் மே.11 வரையில் மூடப்பட உத்தரவிடப்பட்டுள்ளது.
முன்னதாக, பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அப்பாவி மக்கள் 26 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இதனால், இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகள் முறிவடைந்து, தற்போது தாக்குதல்கள் தொடங்கியுள்ளதால், நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: ஆபரேஷன் சிந்தூர்: அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடங்கியது!