பனாமா அதிபருடன் சசி தரூர் தலைமையிலான அனைத்துக் கட்சிக் குழு!
பனாமா அதிபரை சசி தரூர் தலைமையிலான அனைத்துக் கட்சிக் குழுவினர் சந்தித்து பேசியுள்ளனர்.
பனாமா நாட்டுக்குச் சென்றுள்ள காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் தலைமையிலான அனைத்துக் கட்சிக் குழுவினர் அந்நாட்டு அதிபர் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் ஆகியோரைச் சந்தித்துப் பேசியுள்ளனர்.
பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைகள் மற்றும் நிலைப்பாடு குறித்து எடுத்துரைக்க காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் தலைமையிலான அனைத்துக் கட்சிக் குழுவினர் மத்திய அமெரிக்க நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.
இந்தப் பயணங்களின் ஒரு பகுதியாக பனாமா நாட்டுக்கு அந்தக் குழு சென்றுள்ளது. பின்னர், இன்று (மே 29) மதியம் பனாமா அதிபர் ஜோஸ் ராவௌல் முலினோவை அவர்கள் நேரில் சந்தித்துப் பேசியுள்ளனர்.
Advertisement
Advertisement
இதுகுறித்து, தனது எக்ஸ் தளப் பதிவில், இந்தக் குழுவின் தலைவர் சசி தரூர் கூறுகையில், பனாமா அதிபர் ஜோஸ் ராவௌல் முலினோ பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் போராட்டத்தின் மீதான தனது புரிதல் மற்றும் ஆதரவை வெளிப்படுத்தியதாகக் கூறியுள்ளார்.
இந்நிலையில், இன்று (மே 29) மாலை பனாமாவின் இந்தியத் தூதர் சுமித் சேத் வழங்கிய விருந்தில், சசி தரூர் தலைமையிலான அனைத்துக் கட்சிக் குழுவினர், பனாமா வெளியுறவுத் துறை அமைச்சர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அப்போது, அந்த நிகழ்ச்சியில் பேசிய பனாமா வெளியுறவுத் துறை அமைச்சர் ஜேவியர் மார்ட்டினேஸ் அசா வாஸ்குவெஸ், பயங்கரவாதத்துக்கு எதிரான தனது கருத்துகளை பகிரங்கமாகப் பகிர்ந்ததுடன் இந்தியாவுக்கு தனது ஆதரவையும் தெரிவித்துள்ளார்.
இந்த அனைத்துக் கட்சிக் குழுவில், ஷம்பாவி சௌதாரி (லோக் ஜனசக்தி கட்சி), சராஃபராஸ் அஹமது (ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா), ஜி.எம். ஹரிஷ் பாலயாகி (தெலுங்கு தேசம்), சிவசேனையின் மல்லிகார்ஜுன் தேவ்தா மற்றும் மிலிண்ட் தியோரா, பாஜகவின் ஷஷாங் மணி திரிபாதி, தேஜஸ்வி சூரியா, புபனேஸ்வர் கலிதா மற்றும் அமெரிக்காவுக்கான முன்னாள் இந்தியத் தூதர் தரஞ்ஜித் சிங் சாந்து ஆகியோர் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: தில்லியில் தொடரும் நடவடிக்கை! சட்டவிரோதமாக குடியேறிய 9 வங்கதேசத்தினர் கைது!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.