தில்லி கார் வெடிப்புக்கு ஆதரவு? சமூக வலைதளங்களை கண்காணிக்க அறிவுறுத்தல்
தில்லி கார் வெடிப்பு சம்பவத்துக்கு ஆதரவாக கருத்துகளைப் பதிவிடுவோரை கண்காணிக்க டிஜிபிக்கு அறிவுறுத்தல்
தில்லி கார் வெடிப்பு சம்பவத்துக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் கொண்டாட்ட மனநிலையில் கருத்துகளைப் பதிவிடுவோரை கண்காணிக்க காவல் துறை தலைமை இயக்குநருக்கு (டிஜிபி) அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா அறிவுறுத்தியுள்ளார்.
அசாமில் நகோன் மாவட்டம் ராஹா பகுதியில் செய்தியாளர்களுடன் பேசிய முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா,
''தில்லி கார் வெடிப்பு சம்பவத்திற்கு சிலர் ஆதரவு தெரிவிக்கின்றனர் அல்லது சமுக வலைதளங்களில் கொண்டாட்ட எமோஜிக்களை (முகபாவனைகள்) பதிவிடுகின்றனர். கடந்த இரவிலிருந்து அவர்களின் பின்புலங்களை ஆராய உத்தரவிட்டுள்ளேன். பயங்கரவாத செயலை கொண்டாடுவது, நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பயங்கரவாதத்திற்கு ஆதரவளிப்பதையே குறிக்கிறது.
Advertisement
Advertisement
இவ்வாறு தில்லி கார் வெடிப்பு சம்பவத்திற்கு ஆதரவாக கருத்துகளைப் பதிவிடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அசாமில் பயங்கரவாதம் தலைதூக்குவதை அனுமதிக்கமாட்டேன். தில்லி கார் வெடிப்பு சம்பவம் கடுமையாக கண்டிக்கத்தக்கது. இத்தகைய சூழலில் பயங்கரவாத்திற்கு எதிராக நாட்டு மக்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்'' எனக் குறிப்பிட்டார்.
தில்லி செங்கோட்டை அருகேவுள்ள லால் கிலா மெட்ரோ ரயில் நிலையத்தின் முதலாம் வாயில் அருகே நேற்று மாலை 6.50 மணியளவில் கார் வெடித்து விபத்துக்குள்ளானது. இச்சம்பவத்தில் இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர். 24 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் (என்ஐஏ) விசாரணை மேற்கொண்டுள்ளனர். முன்னதாக, இந்த சம்பவம் குறித்து தில்லி காவல்துறையினர் விசாரித்து வந்த நிலையில் இந்த வழக்கின் விசாரணை தேசிய புலனாய்வு முகமை அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு பெருவெற்றி? பிகார் வாக்குப்பதிவு கருத்துக் கணிப்புகள் பலிக்குமா?