முகப்பு
இந்தியா

புத்தகப் புழு, ஒரே நம்பிக்கை! தில்லி கார் வெடிப்பில் சந்தேகிக்கப்படும் உமர் பற்றி குடும்பத்தினர்!

புத்தகப் புழு, ஒரே நம்பிக்கை என்று தில்லி கார் வெடிப்பில் தொடர்புடையவராகக் கருதப்படும் உமர் பற்றி குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

Updated On : 11 நவம்பர், 2025 at 10:17 AM
உமர் குடும்பத்தினர்
பகிர்:

தில்லி கார் வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவராகக் கருதப்படும் ஃபரிதாபாத்தைச் சேர்ந்த மருத்துவர் முகமது உமர் பற்றி அவரது குடும்பத்தினர் கூறுகையில், எப்போதும் புத்தகப் புழுவாக இருப்பார், எங்கள் குடும்பத்தின் ஒரே நம்பிக்கையாகத் திகழ்ந்தவர் என்கிறார்கள்.

தில்லி செங்கோட்டை அருகே நடந்த கார் வெடிப்புச் சம்பவத்தில், உமரின் பெயரைப் பார்த்த போது சொல்ல முடியாத அதிர்ச்சியை குடும்பத்தினர் அடைந்ததாகவும் கூறுகிறார்கள்.

கடந்த வாரம், ஜம்மு- காஷ்மீர், ஹரியாணா, உத்தர பிரதேசம் ஆகிய 3 மாநில காவல்துறையினர் கூட்டாக மேற்கொண்ட நடவடிக்கையில் மருத்துவர்கள் உள்பட 8 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 2900 கிலோ வெடிபொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த கும்பலுடன் தொடர்பிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் டாக்டர் உமர், தில்லிக்கு காரை ஓட்டி வந்து தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

தில்லி கார் வெடிப்புச் சம்பவத்தில் உமருக்குத் தொடர்பிருப்பதாகக் கூறப்படும் நிலையில், நேற்று இரவே உமரின் இரண்டு சகோதரர்கள், அவரது தாய் உள்ளிட்டோரிடம் காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கியிருக்கிறார்கள்.

உமரின் மூத்த சகோதரர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். தம்பி படித்து வருகிறார்.

உமர் பற்றி, அவரது சகோதரரின் மனைவி கூறுகையில், கடைசியாக புல்வாமாவில் கிராமத்து வீட்டுக்கு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்புதான் உமர் வந்ததாகவும், கடந்த வாரம் வெள்ளிக்கிழமை போனில் அவரிடம் பேசும்போது, தேர்வுகள் நெருங்குவதால், கல்லூரி நூலகத்தில் படித்துக் கொண்டிருப்பதாகக் கூறினார். அவர் எப்போதுமே புத்தகப் புழவாகவே இருப்பார். வீட்டுக்கு வரும்போதும், எங்களையும் படிக்க வேண்டும் என்று வற்புறுத்துவார். அவர் பெயர் பயங்கரவாதிகள் பெயரில் சேர்க்கப்பட்டிருப்பது எங்களுக்கு கடும் அதிர்ச்சி என்று தெரிவித்துள்ளார்.

அவரைப் படிக்க வைக்க, உமரின் தாய் கடுமையான பணிகளை செய்தார். குடும்பத்தின் வறுமையைப் போக்க ஒரே நம்பிக்கையாக இருந்தவர் உமர் என்றும் கூறுகிறார்கள் குடும்பத்தினர்.

உமர் பணியாற்றிய அதே மருத்துவமனையில் வேலை செய்து வந்த இரண்டு மருத்துவர்கள் உள்ளிட்ட எட்டு பேர் கைது செய்யப்பட்டு, வெடிபொருள்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், காவல்துறையிடம் கைதாகக் கூடாது என்பதற்காக தில்லியில் உமர் இந்த நாசவேலையில் ஈடுபட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

summary

Bookworm, only hope, says family of Delhi car blast suspect Umar

முழு கட்டுரையைப் படிக்க →