தலைமை நீதிபதி பி.ஆர். கவாய்யை காலணியால் தாக்க முயற்சித்த வழக்குரைஞரை கர்நாடக பாஜக நிர்வாகியும் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியுமான பாஸ்கர் ராவ் பாராட்டியுள்ளார்.
உச்சநீதிமன்ற அறைக்குள் கடந்த திங்கள்கிழமை விசாரணையின்போது, தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது காலணியை வீசுவதற்கு முயற்சித்த வழக்குரைஞர் ராகேஷ் கிஷோா் (71) என்பவரை பாதுகாவலர்கள் தடுத்து நிறுத்தினர்.
மேலும், அவரிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், தலைமை நீதிபதி தரப்பில் புகார் கொடுக்கப்படாததால், கைது செய்யாமல் காவல்துறையினர் விடுவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, ”காலணியை வீசியதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. இதைச் செய்வதற்கு கடவுள்தான் என்னை தூண்டினார்” என்று வழக்குரைஞர் ராகேஷ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இதனிடையே, வழக்குரைஞா் ராகேஷ் கிஷோரின் உரிமத்தை ரத்து செய்து இந்திய வழக்குரைஞா் கவுன்சில் (இந்திய பாா் கவுன்சில்) திங்கள்கிழமை உடனடி நடவடிக்கை மேற்கொண்டது.
இந்த நிலையில், ராகேஷ் கிஷோா் பெயரில் இருந்த போலி எக்ஸ் கணக்கு ஒன்றில், உரிமம் ரத்து செய்யப்பட்ட செய்தியைப் பகிர்ந்து, ’எந்த வருத்தமும் இல்லை’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
அதனை ராகேஷ் கிஷோரின் பதிவு என நினைத்து, “சட்டப்படி தவறாக இருந்தாலும், இந்த வயதில் விளைவுகளைப் பொருட்படுத்தாமல், ஒரு நிலைபாட்டை எடுத்து அதன்படி வாழும் உங்கள் தைரியத்தை நான் பாராட்டுகிறேன்” என்று பாஸ்கர் ராவ் பதிவிட்டுள்ளார்.
பின்னர், அது போலி கணக்கு எனத் தெரிந்தவுடன் தனது கமெண்ட்டை பாஸ்கர் ராவ் நீக்கியுள்ளார். இருப்பினும், ராகேஷ் கிஷோரின் பேட்டி காணொலியை தனது எக்ஸ் தளத்தில் பாஸ்கர் ராவ் பகிர்ந்துள்ளார்.
”தலைமை நீதிபதி மீது நடத்தப்பட்ட தாக்குதல், அனைத்து இந்தியர்களையும் கொதிப்படையச் செய்துள்ளது” என்று பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்திருக்கும் நிலையில், கர்நாடகத்தைச் சேர்ந்த பாஜக நிர்வாகி, வழக்குரைஞருக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்.
பாஸ்கர் ராவ், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஆவார். பெங்களூரு மாநகரக் காவல்துறை ஆணையராகப் பதவி வகித்துள்ளார். ஓய்வுக்குப் பிறகு ஆம் ஆத்மியில் இணைந்த பாஸ்கர், சில மாதங்களில் பாஜகவில் சேர்ந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.