பிரதமர் மோடியுடன் எகிப்து வெளியுறவு அமைச்சர் சந்திப்பு!
பிரதமர் நரேந்திர மோடியை எகிப்து வெளியுறவு அமைச்சர் நேரில் சந்தித்துள்ளது குறித்து...
பிரதமர் நரேந்திர மோடியை, எகிப்து அரசின் வெளியுறவு அமைச்சர் பத்ர் அப்தலட்டி இன்று (அக். 17) நேரில் சந்தித்து உரையாடியுள்ளார்.
எகிப்து வெளியுறவு அமைச்சர் பத்ர் அப்தலட்டி, 2 நாள்கள் அரசு முறைப் பயணமாக இந்தியாவுக்கு வந்துள்ளார். இந்தப் பயணத்தின் இறுதி நாளான இன்று அவர் தில்லியில், பிரதமர் மோடியை நேரில் சந்தித்து உரையாடியுள்ளார்.
இந்தச் சந்திப்பில், காஸா அமைதி ஒப்பந்தத்தில் முக்கிய பங்காற்றிய எகிப்து அதிபர் அப்தெல் ஃபட்டாஹ் எல்-சிஸிக்கு பிரதமர் மோடி தனது வாழ்த்துக்களைத் தெரிவிப்பதாகக் கூறியுள்ளார்.
இதுபற்றி, பிரதமர் மோடி தனது எக்ஸ் தளப் பக்கத்தில், “காஸா அமைதி ஒப்பந்தம் வெற்றி பெறுவதற்கு முக்கிய பங்காற்றிய எகிப்து அதிபர் சிஸிக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, எகிப்து வெளியுறவு அமைச்சராகப் பதவியேற்ற பின் முதல்முறை இந்தியா வந்துள்ள அப்தலட்டி, கடந்த அக்.16 ஆம் தேதி மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை நேரில் சந்தித்து உரையாடியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: திரிபுரா: தடை செய்யப்பட்ட 90,000 இருமல் மருந்து பாட்டில்கள் பறிமுதல்!