பிரதமர் நரேந்திர மோடியுடன், நேபாளத்தின் இடைக்கால பிரதமராகப் பதவியேற்றுள்ள சுசீலா கார்கி தொலைபேசி வாயிலாக உரையாடியுள்ளார்.
நேபாளத்தில், சமூக வலைதளங்கள் தடை மற்றும் ஆட்சியாளர்களின் ஊழல் ஆகியவற்றை எதிர்த்து, ஜென் - ஸி என்றழைக்கப்படும் இளம்தலைமுறையினர் மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டம் வன்முறையாக வெடித்த நிலையில், அப்போதைய பிரதமர் சர்மா ஓலி தனது பதவியை ராஜிநாமா செய்தார். இதையடுத்து, நேபாள அரசு கவிழ்க்கப்பட்டது.
நேபாள இளைஞர்கள் மற்றும் ஆர்வலர்களின் ஆதரவுடன், முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சுசீலா கார்கி, கடந்த செப்.12 ஆம் தேதி இடைக்கால பிரதமராகப் பதவியேற்றார்.
இந்நிலையில், நேபாளத்தின் முதல் பெண் பிரதமரான சுசீலா கார்கி, இன்று (செப்.18) பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசி வாயிலாக உரையாடியுள்ளார். பிரதமராகப் பதவியேற்ற பின் முதல்முறையாக வெளிநாட்டு தலைவர் ஒருவருடன் பேசிய அவர், பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேபாளத்தின் வரலாறு காணாத புரட்சியின் மூலம் பிரதமரான சுசீலா கார்கிக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்களைத் தெரிவித்ததாகவும், நேபாள அரசின் முன்னுரிமைகளுக்கு இந்தியா முழு ஆதரவை வழங்கும் என உறுதியளித்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த உரையாடலின்போது, நேபாளத்தில் புதியதாக பொது தேர்தல் நடத்துவதே இடைக்கால அரசின் முதல் நோக்கம் என பிரதமர் சுசீலா கார்கி கூறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: பிரிட்டனின் அரச நெறிமுறைகளை மீறினாரா அதிபர் டிரம்ப்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.