மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்
தெற்கு, வடகிழக்கு, வடமேற்கு மற்றும் சிறிய மாநிலங்கள் பாரபட்சமாக நடத்தப்படுவதை அனுமதிக்க மாட்டோம் என ராகுல் பேச்சு...
மகளிர் இடஒதுகீட்டுக்கு நிபந்தனையின்றி காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவிப்பதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று (ஏப். 15) தெரிவித்தார்.
தெற்கு, வடகிழக்கு, வடமேற்கு மற்றும் சிறிய மாநிலங்கள் பாரபட்சமாக நடத்தப்படுவதை அனுமதிக்க மாட்டோம் எனவும் குறிப்பிட்டார்.
நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிராக காங்கிரஸ் உறுப்பினர்கள் வாக்களிப்பார்கள் என்றும், மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவை ஆதரிப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
Advertisement
இது தொடர்பாக விடியோ வெளியிட்டு ராகுல் காந்தி பேசியுள்ளதாவது:
''பாஜக அரசு தற்போது முன்மொழிந்திருப்பதுக்கும், பெண்களுக்கான இட ஒதுக்கீட்டிற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. இந்தத் திருத்தம் என்பது, தொகுதி மறுவரையறையைப் பயன்படுத்தி அதிகாரத்தைக் கைப்பற்ற மேற்கொள்ளப்படும் முயற்சி.
மகளிர் இடஒதுக்கீடு நமது அரசமைப்பின் ஒரு பகுதி. அரசு முன்மொழிந்த இடஒதுக்கீட்டுக்கும் அதற்கும் தொடர்பில்லை.
சாதிவாரி கணக்கெடுப்பை புறக்கணித்து பிற்படுத்தப்பட்டோர் (ஓபிஎசி), பட்டியலினத்தோர் (எஸ்சி), பழங்குடியினத்தைச் சேர்ந்தோர் (எஸ்டி) உரிமையைத் திருடுவதை அனுமதிக்க மாட்டோம்'' என ராகுல் குறிப்பிட்டார்.
மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் 106-ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தம் 2023-ஐ (நாரி சக்தி வந்தன் அதிநியம்) அமல்படுத்துவதற்கான சட்டத் திருத்த மசோதா ஏப்.16 முதல் ஏப்.18 வரை நடைபெறவுள்ள நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் அறிமுகமாகவுள்ளது.
அப்போது மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 850-ஆக அதிகரிக்கப்பட்டு அதில் 280 தொகுதிகள் மகளிருக்கு ஒதுக்கப்படவுள்ளன. 2029 மக்களவைத் தேர்தலின்போது இது நடைமுறைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் இந்த முயற்சிக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. நாளை நாடாளுமன்றம் கூடவுள்ள நிலையில், தில்லியில் இன்று (ஏப். 15) இந்தியா கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டனர். இந்த ஆலோசனையின் முடிவில் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிராக வாக்களிப்பதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.