பாகிஸ்தான் மசூதியில் குண்டுவெடிப்பு துரதிருஷ்டவசமானது: ஃபரூக் அப்துல்லா
பாகிஸ்தான் மசூதியில் குண்டுவெடிப்பு துரதிருஷ்டவசமானது என்று தேசிய மாநாட்டுக் கட்சி தலைவர் ஃபரூக் அப்துல்லா தெரிவித்தார்.
பாகிஸ்தான் மசூதியில் குண்டுவெடிப்பு துரதிருஷ்டவசமானது என்று ஃபரூக் அப்துல்லா தெரிவித்தார்.
முகமது ரியாஸ் ஹமதனியின் தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவிப்பதற்காக தெற்கு காஷ்மீர் நகரத்திற்கு தேசிய மாநாட்டுக் கட்சி தலைவர் ஃபரூக் அப்துல்லா ஞாயிற்றுக்கிழமை சென்றிருந்தார்.
அப்போது ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தின் பாம்போர் நகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மசூதிகளுக்குள்ளும் இப்போது குண்டுவெடிப்புகள் நடப்பது துரதிருஷ்டவசமானது.
நாம் அல்லாஹ்விடமிருந்து எவ்வளவு தூரம் விலகிச் சென்றுவிட்டோம் என்பதை இது காட்டுகிறது. இவ்வாறு அவர் குறிப்பிட்டார். தொடர்ந்து, பாகிஸ்தானை ஒரு பயங்கரவாத நாடாக அறிவிக்க வேண்டுமா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, ஃபரூக் அப்துல்லா கருத்து கூற மறுத்துவிட்டார்.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதில் உள்ள ஷியா மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகையின்போது, வெடிகுண்டு மூலம் தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்தத் தாக்குதலில் 36 பேர் பலியான நிலையில், 160-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனைத் தொடர்ந்து, தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டவர் என்று கூறப்படுபவர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதனிடையே, ஷியா மசூதியில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு டேஷ் அமைப்பின் கிளை அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.