மே.வங்கத்தில் கலவரம் ஏற்படுத்த பாஜக முயற்சி! - முதல்வர் மமதா குற்றச்சாட்டு!
பாஜக ஆளும் மாநிலங்களில் மேற்கு வங்க தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக முதல்வர் மமதா பானர்ஜி குற்றச்சாட்டு...
பாஜக ஆளும் மாநிலங்களில் வங்க மொழிப்பேசும் தொழிலாளர்கள் சித்ரவதை செய்யப்படுவதாக, மேற்கு வங்க மாநில முதல்வர் மமதா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.
மேற்கு வங்கத்தின் வட மாவட்டங்களில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் மமதா பானர்ஜி இன்று (ஜன. 16) கலந்துகொண்டார். அப்போது, பேசிய அவர் 2026 சட்டப்பேரவைத் தேர்தல்களில் வெற்றி பெற முடியாது என்பதை உணர்ந்த பாஜக மேற்கு வங்கத்தில் கலவரத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாகக் கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, பிற மாநிலங்களில் புலம்பெயர் தொழிலாளர்கள் மீதான வன்முறைகளை எதிர்த்து முர்ஷிதாபாதில் இன்று உள்ளூர்வாசிகள் மாபெரும் போராட்டம் நடத்தியுள்ளனர்.
Advertisement
Advertisement
இந்தப் போராட்டம் குறித்து பேசிய முதல்வர் மமதா, சிறுபான்மையின சமூகத்தின் கோபம் நியாயமானது எனவும் தொழிலாளர்கள் மீதான தாக்குதல்கள்தான் அந்தப் போராட்டத்திற்கு காரணம் எனவும் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி, அவர் பேசியதாவது:
“பாஜக ஆளும் மாநிலங்களில் மட்டுமே புலம்பெயர் தொழிலாளர்கள் சித்ரவதை செய்யப்படுகிறார்கள். நாங்கள் அவர்கள் குடும்பங்களுடன் துணை நிற்கிறோம்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணிகளால் ஏற்பட்ட பதற்றத்தால் சுமார் 100 பேர் பலியாகியுள்ளனர்” என அவர் தெரிவித்துள்ளார்.