மேற்கு வங்கத்தில் நடைபெறும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளின் மூலம் சுமார் 1.20 கோடி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்படக் கூடும் என முதல்வர் மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (எஸ்ஐஆர்) நடைபெற்று வருகின்றன. இதற்கு, ஏராளமான எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்த நிலையில், தெற்கு கொல்கத்தாவில் உள்ள தனது சட்டப்பேரவைத் தொகுதியான பவானிபூரில் புதன்கிழமை (பிப். 25) நடைபெற்ற கூட்டத்தில் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி கலந்துகொண்டார்.
அப்போது, தேர்தல் ஆணையம் தர்க்கரீதியான முரண்பாடுகள் எனும் பெயரில் அடையாளம் கண்டு வரும் ஏராளமான வாக்காளர்களை நீக்குவதற்குத் திட்டமிட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, அவர் பேசியதாவது:
“இந்திய தேர்தல் ஆணையம் தர்க்கரீதியான முரண்பாடுகள் எனும் பெயரில் அடையாளம் காணும் மிகப் பெரிய எண்ணிக்கையிலான வாக்காளர்களை நீக்க திட்டமிட்டுள்ளது. இதனால், நான் மிகவும் வேதனையாக இருக்கிறேன். முதலில், கடந்த டிசம்பரில் வெளியான வரைவு வாக்காளர் பட்டியலில் 58 லட்சத்திற்கும் மேற்பட்ட பெயர்கள் நீக்கப்பட்டன.
பின்னர், தர்க்கரீதியான முரண்பாடுகள் என அடையாளம் காணப்பட்ட பெயர்களை நீக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். எஸ்ஐஆர் பணிகளில் முடிவில் சுமார் 1.20 கோடி வாக்காளர்களின் பெயர்கள் இறுதியாக நீக்கப்படும் என்று நான் கருதுகிறேன். இந்த விவகாரம் குறித்து நான் உச்ச நீதிமன்றம் வரை போராடியுள்ளேன். இந்தப் போராட்டம் இன்னும் தொடர்கின்றது” என்று கூறியுள்ளார்.
இத்துடன், மேற்கு வங்கம் மாநிலத்தின் இறுதி வாக்காளர் பட்டியல் வரும் பிப். 28 அன்று அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.