எஸ்ஐஆர்! மே.வங்கத்தில் 1.2 கோடி வாக்காளர்கள் நீக்கப்படலாம் - முதல்வர் மமதா வேதனை!
மேற்கு வங்கத்தில் 1.2 கோடி வாக்காளர்கள் நீக்கப்படக் கூடும் என முதல்வர் மமதா பானர்ஜி வேதனை...
மேற்கு வங்கத்தில் நடைபெறும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளின் மூலம் சுமார் 1.20 கோடி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்படக் கூடும் என முதல்வர் மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (எஸ்ஐஆர்) நடைபெற்று வருகின்றன. இதற்கு, ஏராளமான எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்த நிலையில், தெற்கு கொல்கத்தாவில் உள்ள தனது சட்டப்பேரவைத் தொகுதியான பவானிபூரில் புதன்கிழமை (பிப். 25) நடைபெற்ற கூட்டத்தில் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி கலந்துகொண்டார்.
Advertisement
Advertisement
அப்போது, தேர்தல் ஆணையம் தர்க்கரீதியான முரண்பாடுகள் எனும் பெயரில் அடையாளம் கண்டு வரும் ஏராளமான வாக்காளர்களை நீக்குவதற்குத் திட்டமிட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, அவர் பேசியதாவது:
“இந்திய தேர்தல் ஆணையம் தர்க்கரீதியான முரண்பாடுகள் எனும் பெயரில் அடையாளம் காணும் மிகப் பெரிய எண்ணிக்கையிலான வாக்காளர்களை நீக்க திட்டமிட்டுள்ளது. இதனால், நான் மிகவும் வேதனையாக இருக்கிறேன். முதலில், கடந்த டிசம்பரில் வெளியான வரைவு வாக்காளர் பட்டியலில் 58 லட்சத்திற்கும் மேற்பட்ட பெயர்கள் நீக்கப்பட்டன.
பின்னர், தர்க்கரீதியான முரண்பாடுகள் என அடையாளம் காணப்பட்ட பெயர்களை நீக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். எஸ்ஐஆர் பணிகளில் முடிவில் சுமார் 1.20 கோடி வாக்காளர்களின் பெயர்கள் இறுதியாக நீக்கப்படும் என்று நான் கருதுகிறேன். இந்த விவகாரம் குறித்து நான் உச்ச நீதிமன்றம் வரை போராடியுள்ளேன். இந்தப் போராட்டம் இன்னும் தொடர்கின்றது” என்று கூறியுள்ளார்.
இத்துடன், மேற்கு வங்கம் மாநிலத்தின் இறுதி வாக்காளர் பட்டியல் வரும் பிப். 28 அன்று அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
CM Mamata has said that the names of about 1.20 crore voters may be deleted as a result of the SIR in West Bengal.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.