வாக்காளர் பட்டியலில் உள்ள சிறிய எழுத்துப் பிழைகளுக்காக வாக்காளர்களை வரவழைத்து துன்புறுத்த வேண்டாம், வேறு ஆவணங்கள் இல்லாவிடில், ஆதாரை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று எஸ்ஐஆர் வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜரான மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி வாதங்களை முன்வைத்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் நடைபெறும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) பணிகளுக்கு எதிராக அந்த மாநில முதல்வா் மமதா பானா்ஜி தாக்கல் செய்த மனு மீது உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெற்றது.
உச்ச நீதிமன்றத்தில் எஸ்ஐஆர்-க்கு எதிரான வழக்கில் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி இன்று ஆஜராகி, மாநில அரசு தரப்பு வாதங்களை அடுக்கடுக்காக எடுத்துக் கூறினார்.
மேலும், படிவம் - 7ஐப் பயன்படுத்தி, ரகசியமாக பெரிய எண்ணிக்கையிலான வாக்காளர்களை நீக்குவதை நிறுத்துங்கள். மேற்கு வங்க வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட 1.4 கோடி வாக்காளர்களின் விவரங்களை அனைவரும் அறியும்வகையில் ஆன்லைனில் வெளியிடுங்கள். நீக்கப்படும் வாக்காளர்களிடம் நீங்கள் கேட்கும் ஆவணங்கள் இல்லாவிட்டால், அவர்களது ஆதார் அட்டையை ஏற்றுக் கொள்ளுங்கள்.
அது மட்டுமல்லாமல், மேற்கு வங்கத்தில் தேர்தல் பணிக்காக அமர்த்தப்பட்டிருக்கும் 8,100 வெளிமாநில மேற்பார்வையாளர்களை உடனடியாக திரும்பப் பெற்றுக் கொள்ளுங்கள் என்று மமதா பானர்ஜி தனது வாதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
உச்ச நீதிமன்றத்துக்கு ஏன் நேரில் வந்தார் மமதா?
மேற்கு வங்கத்தில் எஸ்ஐஆா் நடவடிக்கையின்கீழ் வரைவு வாக்காளா் பட்டியலில் 58 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கப்பட்டன. மேலும் 1.25 கோடி வாக்காளா்கள் முரண்பாடான தகவல்களை வழங்கியதாக வகைப்படுத்தப்பட்டு அவா்களிடம் உரிய அடையாள ஆவணங்களை இந்திய தோ்தல் ஆணையம் கோரியுள்ளது.
இந்நிலையில், எஸ்ஐஆருக்கு எதிராக ஆளும் திரிணமூல் காங்கிரஸ் உள்பட பல்வேறு தரப்பினா் தாக்கல் செய்த மனுக்கள் மீது ஜனவரி 19-ஆம் தேதி உச்சநீதிமன்றம் விசாரணை நடத்தியது.
அப்போது, ‘ முரண்பாடான தகவல்களை வழங்கியதாக வகைப்படுத்தப்பட்ட வாக்காளா்களின் பெயா்களை அனைத்து கிராமங்கள் மற்றும் பஞ்சாயத்து அலுவலகங்களில் காட்சிப்படுத்த வேண்டும். அவா்கள் ஆவணங்கள் சமா்ப்பிப்பதற்கான ஏற்பாடுகளையும் அந்த அலுவலகத்தில் மேற்கொள்ள வேண்டும்’ என தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனிடையே எஸ்ஐஆருக்கு எதிராக பல முறை தோ்தல் ஆணையத்துக்கு மமதா பானா்ஜி கடிதம் எழுதினாா். இதைத்தொடா்ந்து, தில்லியில் தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் மற்றும் தோ்தல் ஆணையா்களை கடந்த திங்கள்கிழமை சந்தித்த அவா் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டாா்.
இந்நிலையில், எஸ்ஐஆருக்கு எதிராக அவா் ஜனவரி 28-ஆம் தேதி தாக்கல் செய்த மனு மீது உச்சநீதிமன்றத்தில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த் மற்றும் நீதிபதிகள் ஜயமால்ய பாக்சி, விபுல் எம்.பஞ்சோலி ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரித்த நிலையில், சட்டப் படிப்பை (எல்எல்பி) நிறைவு செய்துள்ள மமதா பானா்ஜியே தனது தரப்பு வாதங்களை நீதிபதிகள் முன்னிலையில் முன்வைத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.