விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்வதற்கான திட்டம் இல்லை: நிர்மலா சீதாராமன்
விவசாயக் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்வதற்கான எந்த திட்டமும் மத்திய அரசிடம் இல்லை என நிதியமைச்சர் கூறியது குறித்து...
விவசாயக் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்வதற்கான எந்த திட்டமும் மத்திய அரசின் பரிசீலனையில் இல்லை என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, மக்களவையில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “விவசாயக் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்வதற்கான எந்த திட்டமும் மத்திய அரசிடம் இல்லை. இருப்பினும், விவசாயிகளின் பொருளாதார நிலையை வலுப்படுத்த அரசு பல்வேறு விதமான நடவடிக்கைகளை எடுத்துள்ளன.
அதில் கிசான் கடன் அட்டை மூலம் சரியான நேரத்தில் போதுமான கடன் வழங்குவது. இந்த அட்டையின்கீழ், திருத்தப்பட்ட வட்டி மானியத் திட்டத்தின் அடிப்படையில், ரூ. 3 லட்சம் வரையிலான பயிர்க் கடன் மானிய வட்டி விகிதங்களில் வழங்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், சரியான நேரத்தில் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு கூடுதல் சலுகைகளும் அளிக்கப்படுகின்றன.
மேலும், இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள முன்னுரிமைத் துறை கடன் வழிகாட்டுதல்களின்படி, வேளாண்மை உள்ளிட்ட பொருளாதாரத்தின் முன்னுரிமைத் துறைகளுக்கு வங்கி அமைப்பிலிருந்து பிணையமில்லா குறுகிய கால விவசாயக் கடன்களை ரூ.1.60 லட்சத்திலிருந்து ரூ.2 லட்சமாக அரசு உயர்த்தியுள்ளது” எனத் தெரிவித்தார்.