சந்திரசேகர் ராவ் மகள் கவிதா ஏப்.25-ல் புதிய கட்சி தொடக்கம்!
தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவ் மகள் கவிதா புதிய கட்சி தொடங்குவது குறித்து...
தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா வரும் ஏப்ரல் 25 அன்று புதிய கட்சியைத் தொடங்குவதாகத் தெரிவித்துள்ளார்.
தெலங்கானா முன்னாள் முதல்வரும், பாரதிய ராஷ்டிரிய சமிதி (பி.ஆர்.எஸ்.) கட்சியின் தலைவருமான சந்திரசேகர் ராவின் மகள் கவிதா கடந்த 2025 ஆம் ஆண்டு அக்கட்சியில் இடைநீக்கம் செய்யப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து, பி.ஆர்.எஸ். கட்சியில் இருந்து விலகிய கவிதாவிரைவில் புதிய கட்சியைத் தொடங்குவேன் என கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை (மார்ச் 27) நடைபெற்ற செய்தியாளர்களுடனான சந்திப்பில் பேசிய கவிதா, வரும் ஏப்ரல் 25 அன்று முனீராபாதில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் புதிய கட்சியின் பெயர் மற்றும் கொடி ஆகியவை அறிமுகம் செய்யப்படும் என அறிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறுகையில், இதுவரை ஆண்கள் தொடங்கிய கட்சிகள் மட்டுமே தெலங்கானாவில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன என்றும், தனது கட்சிக்கு பெண்கள் மற்றும் இளம் தலைமுறையினர் ஆதரவளிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, பாரதிய ராஷ்டிரிய சமிதி கட்சிக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டு கவிதா அக்கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.