மேற்கு வங்கத்தை வென்றால் தில்லியையும் கைப்பற்றலாம்: மமதா உறுதி
மேற்கு வங்கத்தை வென்றால் தில்லியையும் கைப்பற்றலாம் என மாநில முதல்வர் மமதா பானர்ஜி உறுதி
மேற்கு வங்கத்தை வென்றால் தில்லியையும் கைப்பற்றலாம் என மாநில முதல்வர் மமதா பானர்ஜி கூறியுள்ளார்.
மேற்கு வங்கத்தின் ராணிகஞ்ச் பகுதியில் ஆளும் திரிணமூல் காங்கிரஸின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் மமதா பானர்ஜி பேசுகையில், "பாஜகவின் துடைத்தெறியும் இயந்திரம்தான் தேர்தல் ஆணையம். அவர்கள் 50 முதல் 100 அதிகாரிகளை தமிழகம் மற்றும் கேரள மக்களைத் துன்புறுத்துவதற்காக அனுப்பி வைத்துள்ளனர்.
தொடர்ந்து, மாநிலங்களுக்குள் பணம், போதைப் பொருள்கள் நுழையும். புல்டோசர்கள் நுழையலாம்; கலவரங்கள் ஏற்படலாம்.
ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 500 பேரில் 400 பேரின் பெயர்கள் நீக்கப்படுவதாகக் கேள்விப்படுகிறேன். இடு வேடிக்கையாக இருக்கிறதா? நாட்டில் என்ன நடக்கிறது? பாஜக எல்லா வரம்புகளையும் மீறுகிறது.
பெஹாலாவில் பல கடைகள் இடிக்கப்பட்டுள்ளன. புல்டோசர்களால் இடிக்கப்பட்ட கடைகளை நான் மீண்டும் கட்டியெழுப்புவேன். இவை யாவும் எங்கள் உத்தரவின்பேரில் நடத்தப்படவில்லை. புல்டோசர் கொண்டு இடித்து, தங்கள் விருப்பப்படி செய்பவர்களை நீங்கள் ஆதரிக்கிறீர்களா?
மாநிலத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வராக இருந்தபோதிலும், அவர்கள் என்னுடைய அனைத்து அதிகாரங்களையும் பறித்து விட்டனர். இங்கு யாராவது வர முயற்சித்தால், அவர்களை புல்டோசர் மூலம் விரட்டியடிக்கின்றனர்.
பிகார் தேர்தலில் பெண்களுக்கு ரூ. 10,000 கொடுக்கப்பட்டதை நீங்கள் அறிவீர்கள். தேர்தலைக் கொண்டு அவர்கள் வியாபாரம் செய்கிறார்களா?
பணம் கொடுத்த அடுத்த நாளே, அதனைத் திருப்பிக் கொடுங்கள் என்கிறார்கள். அவர்கள் உங்களை நசுக்கி விடுகின்றனர்.
தாய்மார்கள், சகோதரிகள் உங்களுக்கு ஒரு நாள் மட்டும் வேண்டுமா? அல்லது வாழ்நாள் முழுவதும் வேண்டுமா? என்பதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.
அவர்கள் மிகப்பெரிய கொள்ளையர்கள், சர்வாதிகார புல்டோசர்களின் கும்பல், வாக்காளர் பட்டியலிலிருந்து பெயர்களை நீக்கும் ஒரு கும்பல்.
நீங்கள் இங்கு இவ்வளவு காலம் தங்கியிருந்த பிறகும், நீங்கள் குடிமகனா இல்லையா என்பதை நிரூபிக்க வேண்டிய நிலைமை உள்ளது.
தேர்தல் நேரங்களில் விலையைக் குறைத்துவிட்டதாக அவர்கள் சொல்வார்கள். எரிவாயுவின் விலை ரூ. 400-லிருந்து ரூ. 1,100-ஆக உயர்த்தி விட்டீர்கள்.
பெட்ரோல் விலை எத்தனை முறை உயர்த்தப்பட்டது? ரயில் கட்டணம் எத்தனை முறை உயர்த்தப்பட்டது? ரயில்வே விற்கப்பட்டு விட்டது.
மேற்கு வங்கத்தை வென்றால், தில்லியையும் கைப்பற்ற முடியும் என்று நான் உறுதியளிக்கிறேன்" என்று தெரிவித்தார்.