சீர்காழி: வெளிமாவட்ட நெல்லை கொள்முதல் செய்வதை கண்டித்து விவசாயிகள் முற்றுகையிட முடிவு
சீர்காழி பகுதியில் நேரடி கொள்முதல் நிலையங்களில் வெளிமாவட்ட நெல்லை கொள்முதல் செய்வதை கண்டித்து விவசாயிகள் முற்றுகையிட முடிவு செய்துள்ளனர்.
சீர்காழி: சீர்காழி பகுதியில் நேரடி கொள்முதல் நிலையங்களில் வெளிமாவட்ட நெல்லை கொள்முதல் செய்வதை கண்டித்து விவசாயிகள் முற்றுகையிட முடிவு செய்துள்ளனர்.
சீர்காழி தாலுகாவிற்கு உட்பட்ட சீர்காழி அகனி வல்லுவகுடி கொண்டல் மருதங்குடி பணங்கட்டங்குடி அகர எலத்தூர் ஆதமங்கலம் பெருமங்கலம் திருப்புங்கூர் கதிராமங்கலம் கற்கோவில் எடக்குடி வடபாதி காரைமேடு புதுதுறை தில்லைவிடங்கன் செம்மங்குடி அத்தியூர் விழுந்திட சமுத்திரம் உள்ளிட்ட கிராமங்களில் விவசாயிகள் மின்மோட்டார் மூலமும் பம்புசெட் மூலமும் குறுவை சாகுபடி செய்திருந்தனர். தற்பொழுது அறுவடைக்கு தயாராக இருந்த குருவை நெற்பயிர்கள் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மழை நீரில் மூழ்கி அறுவடை செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் அறுவடை செய்ய முடியாமல் வேதனை அடைந்துள்ளனர்.
இந்த நிலையில் பல்வேறு வெளி மாவட்டங்களில் இருந்து குறுவை நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டு சட்டவிரோதமாக சீர்காழி பகுதியில் உள்ள அனைத்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. இதனால் இங்குள்ள விவசாயிகள் மிகவும் வேதனை அடைந்து வருகின்றன. வெளிமாநில மற்றும் வெளிமாவட்ட நெல் மூட்டைகளை மறைமுகமாக கொண்டுவரப்பட்டு சீர்காழி பகுதியில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படுவதால் சீர்காழி பகுதியில் உள்ள விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. மேலும் வெளிமாவட்ட மாநில நெல் மூட்டைகள் அதிக அளவில் கொள்முதல் செய்யப்படுவதால் இங்குள்ள விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு தொகை கிடைக்காத நிலை ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் சீர்காழி பகுதியில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் வெளி மாவட்டத்தை சேர்ந்த நெல்களை கொள்முதல் செய்யாத வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் விவசாயிகள் அனைத்து நேரடி நெல் கொள்முதல் நிலையம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என அறிவித்து வருகின்றனர்.