மகாராஷ்டிரம்: கடலில் தத்தளித்து வந்த 16 மீனவர்கள் மீட்பு
மகாராஷ்டிரத்தில் தானே கடல்பகுதியில் சிக்கித்தவித்து வந்த 16 மீனவர்களை மும்பையின் கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையம் பத்திரமாக மீட்டது.
மும்பை: மகாராஷ்டிரத்தில் தானே கடல்பகுதியில் சிக்கித்தவித்து வந்த 16 மீனவர்களை மும்பையின் கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையம் மீட்டு வந்ததாக இந்திய கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிரத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. கடலோர பகுதிகளில் அதிவேக காற்றுடன் கூடிய மழை பெய்து வருவதால் கடல் சீற்றம் அதிகரித்து காணப்படுகிறது.
இந்த நிலையில் கடலுக்கு சென்ற படகு ஒன்று அதிவேக காற்று மற்றும் கடல்சீற்றத்தால் தத்தளித்துக்கொண்டு இருந்தது.
இது குறித்த செய்தி மும்பையின் கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திற்கு வழங்கப்பட்டது. இதனை அடுத்து அர்னாலா துறைமுக பகுதியில் இருந்த படகுகளுக்கு இந்த தகவல் பரிமாற்றப்பட்டது. கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் தொடர் முயற்சியால் 70 கிலோமீட்டருக்கு அப்பால் கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த 16 மீனவர்கள் மீட்கப்பட்டனர். மீட்கப்பட்ட மீனவர்கள் அனைவரும் மும்பைக்கு பத்திரமாக அழைத்துவரப்பட்டனர்.