புதுச்சேரியில் 8 மாத கர்ப்பிணி உள்பட புதிதாக 16 பேருக்கு கரோனா
புதுச்சேரியில் 8 மாத கர்ப்பிணி உள்பட புதிதாக 16 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி: புதுச்சேரியில் 8 மாத கர்ப்பிணி உள்பட புதிதாக 16 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் தொற்று பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 287-ஆக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் கூறியதாவது:
புதுச்சேரி மாநிலத்தில் வியாழக்கிழமை வரை 271 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதில் 116 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 148 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தனர். மேலும், 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் தற்போது புதிதாக காரைக்காலைச் சேர்ந்த 8 மாத கர்ப்பிணி உள்பட 16 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 7 பேருக்கு தொற்று எப்படி பரவியது என்பது தெரியவில்லை. மற்றவர்கள் பாதிக்கப்பட்ட நபர்களுடன் தொடர்பிலிருந்தவர்கள், கர்ப்பிணி சென்னை சென்று திரும்பியவர் ஆவார்.
இதனிடையே 2 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளதால், வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 118 ஆக உயர்ந்துள்ளது. இதனால் தற்போது புதுச்சேரி மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 287 ஆகவும், சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 162 ஆகவும் உயர்ந்துள்ளது என்று கூறினார்.