அணையில் படகு விபத்து: மாயமானவர்களில் 3 பெண்கள், 2 குழந்தைகளின் உடல்கள் மீட்பு!
மத்தியப் பிரதேசத்தில் அணையில் படகு கவிழ்ந்து மாயமானவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதைப் பற்றி...
மத்தியப் பிரதேசத்தின் சிவபுரி மாவட்டத்திலுள்ள அணையில் படகு கவிழ்ந்து மாயமானவர்களில் 5 பேரது உடல்கள் மீட்கப்பட்டுள்ளது.
சிவபுரியின் மாதா திலா அணையில், நேற்று (மார்ச் 18) மாலை பயணம் செய்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், பயணம் செய்த 8 பேரை கிராமவாசிகள் உடனடியாக மீட்டனர். ஆனால், மீதமுள்ள 4 குழந்தைகள் மற்றும் 3 பெண்கள் மாயமாகினர்.
இதனைத் தொடர்ந்து, மாயமான 7 பேரையும் மீட்க உடனடியாக ஆழ் கடல் நீச்சல் வீரர்கள் வரவழைக்கப்பட்டு தேசிய பேரிடர் மீட்புப் படையினரின் சார்பில் மீட்புப் பணி துவங்கியது.
Advertisement
Advertisement
சுமார் 15 மணி நேரம் நடைபெற்ற இந்த மீட்புப் பணியினால் இன்று (மார்ச் 19) 2 குழந்தைகள் மற்றும் 3 பெண்கள் என மொத்தம் 5 பேரது உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
இதையும் படிக்க: சுனிதா வில்லியம்ஸுக்கும் இந்தியாவுக்கும் என்ன தொடர்பு? சுவாரஸ்ய தகவல்கள்!!
இருப்பினும், மாயமான 2 குழந்தைகளின் நிலையென்ன என்பது இன்னும் தெரியவராத சூழலில் அவர்கள் உயிர் பிழைத்திருக்கும் வாய்ப்பு மிகவும் குறைவு எனக் கூறப்படுகின்றது.
முன்னதாக, அந்த அணையின் மத்தியிலுள்ள தீவிலிருக்கும் கோயிலுக்கு செல்ல அவர்கள் நேற்று (மார்ச் 18) மாலை பயணம் மேற்கொண்டிருந்தனர். அப்போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த படகு கவிழ்ந்து அதில் பயணித்த அனைவரும் நீரில் மூழ்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த விபத்தில் பலியானவர்களின் குடும்பத்துக்கு மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் ரூ. 2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என அறிவித்துள்ளார். மேலும், இந்த அணையானது உத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள பெட்வா ஆற்றில் கட்டப்பட்டு மத்தியப் பிரதேசத்துடன் அதன் எல்லையை பகிர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.