கோவை மாநகரில் சூறாவளிக் காற்றுடன் மழை
கோவை மாநகரில் வியாழக்கிழமை இரவு பலத்த சூறாவளிக் காற்றுடன் மழை பெய்தது.
கோவை: கோவை மாநகரில் வியாழக்கிழமை இரவு பலத்த சூறாவளிக் காற்றுடன் மழை பெய்தது.
கோவையில் கடந்த சில நாள்களாக பகல் நேரத்தில் 90 முதல் 98 டிகிரி பாரன்ஹீட் வரை வெயிலும், மாலை நேரங்களில் மழை மேகங்களுடன் குளிர்ந்த காற்றும் வீசி வருகிறது. மாவட்டத்தின் சில பகுதிகளில் பலத்த காற்றுடன் மழையும் பெய்து வந்தது.
இந்நிலையில், வியாழக்கிழமை மாலை 5.45 மணி முதல் கோவை புறநகர், மாநகரப் பகுதிகளில் பலத்த சூறாவளிக் காற்றுடன் மழை பெய்யத் தொடங்கியது.
மாநகரில் பீளமேடு, சிங்காநல்லூர், காந்திபுரம், புலியகுளம், கணபதி, ராமநாதபுரம், போத்தனூர், உக்கடம், ஆர்.எஸ்.புரம் உள்ளிட்ட பகுதிகளிலும் புறநகரில் அன்னூர், சூலூர், தொண்டாமுத்தூர், வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த சூறாவளிக் காற்று, இடி - மின்னலுடன் மழை பெய்தது.
நீண்ட நாள்களுக்கு பிறகு கோவையில் அதிக அளவில் மழை பெய்திருப்பதால் மக்கள் மகிழ்ச்சியடைந்திருக்கின்றனர்.