நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே இலங்கைக்கு படகு மூலம் 96 கிலோ கஞ்சாவை கடத்திச் செல்ல முயன்ற இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்த முயன்ற படகையும் பறிமுதல் செய்தனர்.
இதையும் படிக்க | தமிழகத்தில் புதிதாக 945 பேருக்கு கரோனா தொற்று
வேதாரண்யத்தை அடுத்த புஷ்பவனம் மீனவர் காலனி கடற்கரையில் இருந்து கஞ்சா கடத்த இருப்பதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, வேதாரண்யம் கடலோரக் காவல் நிலைய காவலர்கள் வியாழக்கிழமை மாலையில் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது கடலோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீன்பிடிப் படகை சோதனையிட்டனர். அதில் மீன்பிடி வலைகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 3 மூட்டைகளில் 96 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, அவைகளை பறிமுதல் செய்த காவலர்கள், மீனவர் காலனி பகுதி ராஜாங்கம் மகன் மணிகண்டன் (33) என்பவரை கைது செய்தனர். விசாரணையில் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை இலங்கைக்கு கடத்த இருந்தது தெரிய வந்தது. வேதாரண்யம் கடலோரக் காவல் நிலைய காவலர்கள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.