ஆடி மாதத்தில் அம்மன் கோயில்களுக்கு ஆன்மிக சுற்றுலா: அமைச்சர் ராமச்சந்திரன்
ஆடி மாதத்தில் குடிமக்கள் கட்டணமின்றி ஆன்மிகப் பயணம்.
ஆடி மாதத்தில் செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அம்மன் கோயில்களுக்கு ஆன்மிக சுற்றுலாப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாக அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்ததாவது:
ஆடி மாதத்தில் செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அம்மன் கோயில்களுக்கு ஆன்மிக சுற்றுலா மேற்கொள்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Advertisement
எனவே இந்த வாய்ப்பை ஆன்மிக பக்தர்கள் பயன்படுத்தி கொண்டு, www.ttdconline.com இணையத்தில் பதிவு செய்து பக்தர்கள் ஆன்மிகப் பயணம் மேற்கொள்ளலாம்.
மேலும், விவரங்களுக்கு 18004231111, 044-25333333, 044-25333444 என்ற தொலைபேசியில் தொடர்பு கொண்டு விவரங்களை அறிந்துக் கொள்ளலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
நிகழ் நிதியாண்டுக்கான இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கையின்போது வெளியிடப்பட்ட அறிவிப்பில், ‘ஆடி மாதத்தில் பிரசித்தி பெற்ற அம்மன் கோயில்களுக்கும், புரட்டாசி மாதத்தில் பிரசித்தி பெற்ற வைணவ கோயில்களுக்கும் வயது மூப்பின் காரணமாகவும், பொருளாதார வசதியின்மை காரணமாகவும், இறை தரிசனம் கிடைக்க இயலாத 60 வயது முதல் 70 வயதுக்குள்பட்ட, தலா 1,000 பக்தா்கள் அழைத்துச் செல்லப்படுவா்.
இதற்கான செலவினத் தொகை ரூ.50 லட்சம் அரசு நிதியாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பினை நிறைவேற்றும் வகையில், சென்னை, தஞ்சாவூா், கோயம்புத்தூா், திருச்சி, மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகிய மண்டலங்களை தலைமையிடமாக கொண்டு புகழ்பெற்ற அம்மன் கோயில்களுக்கு ஆடி மாதத்தில் 1,000 மூத்த குடிமக்கள் கட்டணமின்றி ஆன்மிகப் பயணம் அழைத்துச் செல்ல அறிவிப்பு வெளியிடப்படப்பட்டது குறிப்பிடத்தக்கது.