திருநெல்வேலி: திருநெல்வேலியில் உள்ள பழமைவாய்ந்த அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயில் ஆனிப்பெருந்திருவிழா வியாழக்கிழமை(ஜூன் 13) கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாகத் தொடங்கியது.
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றும், ஆசியாவிலேயே அதிக எடை கொண்ட தேர் உடைய கோயிலுமான நெல்லை நெல்லையப்பர் திருக்கோயிலில் ஆனிப் பெருந்திருவிழா வெகு விமரிசையாகத் தொடங்கியது.
இந்த விழாவை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, சுவாமி அம்பாளுக்கு பால் மஞ்சள் உள்ளிட்ட அபிஷேக திரவியங்கள் கொண்டு சிறப்புப் பூஜைகளும் மகா தீபாராதனையும் நடைபெற்றது. பூங்கோயில் சப்பரத்தில் உள்பிரகாரத்தில் சுவாமி உலா வந்த பின்பு 5.30 மணிக்குள் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டதும் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் நமச்சிவாய முழக்கத்துடன் நூற்றுக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இரவு 7 மணிக்கு பூங்கோயில் சப்பரத்தில் சுவாமி-அம்பாள் திருவீதியுலா நடைபெறுகிறது.
10 நாட்கள் நடைபெறும் திருவிழா நாள்களில் தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் பல்வேறு வாகனங்களில் சுவாமி-அம்பாள் வீதியுலா நவந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பர்.
ஆனிப் பெருந்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான ஆசியாவிலேயே அதிக எடை கொண்ட திருத்தேர் ஓடும் திருவிழா வரும் 21 ஆம் தேதி நடைபெறுகிறது.
சுவாமி, அம்பாள், விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர் தனித்தனி தேர்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.